அடிப்படைகளைத் தகர்க்கும் ஹஸ்ரஜியின் சம்பவங்கள் ஆயிரம்


அபூ அனூத் ஸலபி
ண்மையில் கிறிஸ்தவர்களுடனான விவாதம் நடைபெற்ற போதுஅதில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத் தலைமைக்கு சென்றிருந்தேன். விவாதம் நிறைவடைந்த பின் சென்னை மண்ணடியில் நூல்கள் வாங்குவதற்காக சில புத்தகக் கடைகளுக்குச் சென்றபோதுதப்லீக் புத்தகங்கள் விற்பனை செய்யும் ஒரு ஜிப்பா போட்ட தப்லீக் வியாபாரியின் கடையில் என் கண்ணில் பட்ட ஒரு புத்தகம்தான் இது. இதை வாங்கி விமானத்தில் வரும்போதே படித்து முடித்தவிட்டேன். ஆயிரம் சம்பவங்கள் பற்றி 10 பாகங்களாக எழுதப்பட்ட அந்த நூலின் முதல் பாகத்தில் 100 சம்பவங்கள் உள்ளன. அந்த சம்பவங்கள் ஒவ்வொன்றும் கற்பனைக் கதைகளாகவும் பொய்கள் நிறைந்ததாகவும் உள்ளன. இப்போது அந்த நூலின் முதல் பாகத்திலுள்ள கதைகள்  பற்றிய விமர்சினத்தைப் பதிவு செய்கின்றேன். எனது அன்பிற்கினிய தப்லீக் சகோதரர்கள் சிந்திக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

தப்லீக் ஜமாத் என்பது தில்லி மேவாத்தில் முஸ்லிம்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திட உருவாக்கப்பட்ட ஓர் இயக்கமாகும். ஆரம்பத்தில் நல்ல நோக்கில்தான் இந்த இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது.
 19ம் நூற்றாண்டின் இறுதிக் காற்கூறில் பெயரளவில் மாத்திரம் முஸ்லிம்களாக வாழ்ந்து கொண்டுஅல்லாஹ்வை மறந்து வாழ்ந்த மக்களையும்சமாதி வழிபாடுகளிலும் தனிநபர் வழிபாட்டிலும் மூழ்கிக்கிடந்த மக்களையும்இஸ்லாமியக் கடமைகள் இன்னதென்று அறியாமல் அவற்றை அலட்சியப்படுத்தி வாழ்ந்த மக்களையும் கண்டு பெரியார் இல்யாஸ் அவர்கள் கவலைப்பட்டு துவக்கிய இயக்கமே தப்லீக் இயக்கமாகும்.
 பெரியார் இல்யாஸ் அவர்களால் தப்லீக் இயக்கம் உருப்பெற்ற பிறகு சமாதிகளில் மண்டியிட்டவர்கள் பள்ளிப் பக்கம் விரயலானார்கள். பூட்டிக்கிடந்த இறையில்லங்கள் தொழுகையாளிகளால் நிரப்பப்பட்டன. மார்க்க ஈடுபாடும் நபி (ஸல்) அவர்கள் பற்றிய மதிப்பு மக்களின் உள்ளங்களில் அதிகமாகியது.
 இந்தப் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ள மக்கள் தங்களின் பொருளையும்உழைப்பையும் தியாகம் செய்கின்ற நிலை ஏற்பட்டது. 7 வருடங்கள் மதுரசாவில் கற்றுப் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே மார்க்கத்தைச் சொல்லத்தக்கவர்கள் என்ற நிலை இந்த ஜமாத்தின் எழுச்சியினால் ஓரளவாவது மாறியது. இதுவெல்லாம் இந்த இயக்கத்தினால் சமுதாயத்திற்கு கிடைத்த நற்பயன்கள். அதில் ஈடுபாடு கொண்ட மக்களின் நோக்கத்தில் இன்றளவும் குறைகாணமுடியாது.
 ஆனாலும்பெரியார் இல்யாஸ் அவர்களின் புதல்வர் யூசுப் ஆகியோரின் மறைவிற்குப்பிறகு இந்த இயக்கத்தின் மார்க்க அறிஞர்கள் தப்லீகின் உயர் நோக்கத்திலிருந்து அதைத் திசை திருப்பும் பணியில் ஈடுபடலானார்கள்.
 மனிதர்களுக்கும்பெரியார்களுக்கும் அளவு கடந்த மரியாதை செய்யும் அளவுக்கு மக்களின் மூளைகளை சலவை செய்யலானார்கள். மீண்டும் சமாதிவழிபாட்டுக்கும் தனிமனித வழிபாட்டுக்கும் மக்களை இழுத்துச் செல்லும் முயற்சியில் ஈடுபடலானார்கள்.
 இந்தபணியைச் செய்தவர்களில் முதலிடத்திலிருப்பவர் உ.பி மாநிலம் சஹாரன்பூரைச் சேர்ந்த ஸகரிய்யா சாஹிப் என்பவர் ஆவார். இவர் தனக்கும் அப்போதைய ஹஜ்ரத்ஜீக்கும் மத்தியில் நிலவிய மாமன் மருமகன் என்ற உறவைப் பயன்படுத்தி தான் எழுதிய நூல்களை தப்லீகின் தஃலீம்களில் படிக்க வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தினார்.
 மக்களை மார்க்கத்தின் அடிப்படையில் அழைத்திட தோற்றுவிக்கப்பட்ட இந்த இயக்கத்தில் இவர் எழுதிய கற்பனைகளும்,கதைகளும் படிக்கப்படும் நிலை ஏற்பட்டுவிட்டது. அல்குர்ஆனை விட அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டு பள்ளிவாயில்கள் தோறும் படிக்கப்படுகின்ற இவரது தஃலீம் தொகுப்பு,தப்லீக் ஜமாத்தினருக்குக் கிடைத்த புதிய வேதமாக ஆகிவிட்டது.
இவ்வாறுஇஸ்லாம் அனுமதிக்காத கற்பனைகளை மாhக்கமாக நம்புவது இவர்களின் வழக்கமாகிவிட்டது. அதேபோல் தனிமனித வழிபாட்டை இவர்களிடம் அதிகமாகக் காண முடியும். அமீர் ஸாப் என்று ஒருவரை ஏற்படுத்தி அவரை மற்ற மனிதர்களை விட்டும் வித்தியாசப்படுத்திப் பார்க்கின்றனர். மக்கள் நீண்ட அணியில் நின்று ஒருவர் பின் ஒருவராக அவரிடம் முஸாபஹா செய்யும் பழக்கத்தை கொண்டுவந்துள்ளனர். இந்த அமீர் இறைநேசர் என்பது நூறு சதவீதம் உறுதியானதைப் போன்றும் இவரிடம் முஸாபஹா  செய்தால் தனக்கு நல்வாழ்வு கிடைப்பது நிச்சயம் என்ற நம்பிக்கையிலும் இவ்வாறு முஸாபஹா செய்கின்றனர். இது இஸ்லாத்திற்குப் புறம்பானதாகும். அல்லாஹ்வின் நேசத்திற்குரியவர் யார்அவனுக்கு நெருக்கமானவர் யார்என்பதை யாராலும் உறுதிபடக் கூற முடியாது.ஆனால் நாம் விமர்சிக்கப் புகுந்த நூலில் இது போன்றவர்களுக்கு சுவர்க்கவாதி என்றெல்லாம் உட்டடித்துள்ளதை நீங்கள் பார்ப்பீhகள்.
பெரியார் கதைகள் என்று இவர்கள் மக்களுக்கு நல்லுபதேசங்களைச் செய்கின்ற போதுமக்களுக்குத் தேவையான சரியான தகவல்களை மட்டும் கூறுவதில்லை. மாறாகநாம் மேலே பார்த்த பொய்யான கதைகளையும் கப்ஸாக்களையும் கூறுகின்றனர். பெரும்பாலும் இந்தக் கப்ஸாக்கள் பெரியார்களைப் பற்றிய கதைகளாகவே இருக்கின்றன. இவை கேட்பதற்கு சுவாரஸ்யமாக இருந்தாலும் இவற்றை சிந்தித்துப் பார்த்தால் இவற்றில் ஏராளமான அறியாமையும் மார்க்கத்திற்கு முரணான அம்சங்களும் இஸ்லாத்தின் அடிப்படைக்கு மாற்றமான விஷயங்களும் இருப்பதைக் காணலாம். 
முழு மனித குலத்துக்கும் தேவையான அனைத்து உபதேசங்களும் குர்ஆனிலும் நபியின் ஹதீஸ்களிலும் ஏராளமாகப் பரவி கிடக்கின்றன. அப்படியிருக்க இந்தப் புருடாக்கள் எதற்குஇவை மக்களை அறிவீனர்களாக ஆக்குமே தவிர மார்க்க அறிவுள்ளவர்களாக ஆக்காது.
இஸ்லாத்தின் உபதேசங்கள்கொள்கை கோட்பாடுகள்சட்டதிட்டங்கள் ஆகிய அனைத்தும் பிறரைப் பாதிக்காத வகையில் பிறருக்கு நன்மை ஏற்படுத்தக்கூடிய வகையிலேயே அமைந்துள்ளன. ஆனால்,பொய்யான தகவல்களை மக்கள் மன்றில் முன்வைக்கும் போது,மக்கள் அறியாமையில் மூழ்கி மார்க்க விரோத விடயங்களில் ஈடுபாடு கொண்டுவிடுகின்றனர்.
இஸ்லாம் கூறும் சாதாரண விஷயத்தைக் கூட தப்லீக் ஜமாஅத்தினர் விளங்காதவர்களாக இருக்கின்றனர். ஒரு வாரம் ஜமாஅத், 40 நாள் ஜமாஅத்நான்கு மாதம் பத்து நாட்கள்என்று வாரக் கணக்கில்மாதக் கணக்கில் நாள் ஒதுக்குமாறு இவர்கள் மக்களிடம் கூறிஇஸ்லாத்தில் இல்லாத இந்த வழக்கத்தை மார்க்கத்தின் முக்கிய கடமை போன்று ஆக்கிவிட்டுள்ளனர்.

 எனினும்தப்லீக் ஜமாத்தில் நல்ல சிந்தனையாளர்களும் உண்மையை அறிய விரும்புபவர்களும் கணிசமாக இருக்கிறார்கள் என்று நாம் நம்புவதால் தஃலீம் தொகுப்பில் காணப்படுகின்ற அபத்தங்களையும் பொய்களையும் கற்பனைக் கதைகளையும் போன்று ஹஸ்ரஜியின் சம்பவங்கள் ஆயிரம் என்ற நூலிலும் உள்ளது. எனவேஅவற்றை அடையாளம் காட்ட விரும்புகின்றோம்.
அந்த நூலில் நபி (ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம்) அவர்களின் பஷாரத்கனவிலும் ஹஜ்ரத்ஜீ (ரஹ்)துஆவில் திருந்திய வாலிபன் என்றெல்லாம் பலவேறு தலைப்புகளின் கீழ் தொகுக்கப்பட்ட இந்த நூலில் நச்சுக்கருத்துகள் பல புகுத்தப்பட்டுள்ளன.
தப்லீக் தஃலீம் தொகுப்பில் ஸகரியா சாகிப் முதலில் சில குர்ஆன் வசனங்களை எழுதுவார். அடுத்து சில ஹதீஸ்களை எழுதுவார். இவர் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் தான் இதை எழுதியுள்ளார் என்ற நம்பிக்கையை மக்களுக்கு ஏற்படுத்துவார். அதன்பிறகு சிறப்புகள் என்ற பெயரில் தனது சொந்தச் சரக்குகளை விற்க ஆரம்பித்து விடுவார். ஆனால்ஹஸ்ரஜியின் சம்பவங்கள் ஆயிரம் என்ற நூலில் அதன் ஆசிரியர் எஸ்.எஸ்.மவ்லானா என்பவர் அத்தனையையும் முழுக் கற்பனையிலேயே தொகுத்துள்ளார்.ஒரு குர்ஆனிய வசனமோ ஒரு ஹதீஸோ அவருடைய நூலில் இடம்பெறவில்லை.
இவர் அளக்கும் கப்ஸாக்களை பாமர உள்ளங்கள் சரியாதவறா?என்று புரிந்துகொள்வதில்லை.பக்திப் பரவசத்தோடு வாங்கிப் படித்துக் கொண்டிருக்கின்றார்கள். எனவேதான்அவரின் நூல்களில் மலிந்துள்ள அபத்தங்களை நாம் இனம் காட்ட வேண்டியுள்ளது. அளப்பதே புனைகதையும் புழுகு மூட்டையும்.அவற்றிற்குக் கீழே படிப்பினை என்று வேறு எழுதியுள்ளார். அதிலும் மார்க்கத்திற்கு விரோதமான விடயங்களையே குறிப்பிட்டுள்ளார். அதிலுள்ள அபத்தங்கள் அனைத்தையும் எழுதுவதென்றால் பல நூறு பக்கங்களில் எழுத வேண்டும். ஆகவேசிந்தனையாளர்கள் உணர்ந்து கொள்ளும் வகையில் ஒரு சில அபத்தங்களை மட்டும் நாம் இனம் காட்டுகிறோம்.
நபி (ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம்) அவர்களின் பஷாரத்
ஸ்ரீலஹ்காவில் ஒரு புத்த பிட்சு மிக பேணுதலாக வாழ்பவர். ஒரு நாள் தனது வழக்கமான இரவு அவ்ராதுகளை (அவர்கள் மார்க்க முறைப்படி) ஓதிவிட்டு தூங்கினார்.
அன்றைய இரவில் கண்மணி நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம்) அவர்கள் புத்த பிட்சுவின் கனவில் தோன்றினார்கள்.
'நீங்கள் யார்?' என்று கேட்டபோது, 'நான் உலகிற்கு ரஹ்மத்தன் லில் ஆலமீனான முஹம்மத் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம்) அவர்கள்என்று கண்மணி நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம்) அவர்கள் கூறினார்கள். பின்பு இஸ்லாத்தைப் பற்றி எடுத்துக் கூறி உலகிலேயே உண்மையான மார்க்கம் இஸ்லாம் மட்டுமே. எனவே நீங்கள் இஸ்லாத்திற்கு வந்து விடுங்கள் என்று தஃவத் கொடுத்தார்கள். கண்மணி நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம்) அவர்களின் வலது பக்கத்தில் இருவரும்இடது பக்கத்தில் இருவரும் நின்றார்கள். 'வலது பக்கத்தில் இருக்கும் இருவர் யார்?' என்று புத்த பிட்சு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம்) அவர்களிடம் கேட்டபோது, 'அபூபக்கர் (ரலி)உமர் (ரலி)'என்று விடையளித்தார்கள். இத்துடன் கனவு முடிந்தது. வழித்துக் கொண்ட புத்த பிட்சு சிலோன் மர்க்கஸ் சென்று அன்றிரவு கனவில் நடந்த விஷயங்களையும்நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம்) அவர்களின் தஃவத்தையும் எடுத்துக் கூறி அங்கேயே இஸ்லாத்தைத் தழுவினார்.
சிலோன் ஜமாஅத் ஒன்று இந்தியாவிற்கு வரத் தயாராக இருந்தது. வந்த ஜமாஅத்துடன் இப்புதிய முஸ்லிமை இணைத்து அனுப்பி விட்டார்கள். டில்லி மர்க்கஸ் சென்ற அவர் இவ்வற்புதக் கனவை ஹஜ்ரத்ஜீ இன் ஆமுல் ஹஸன் (ரஹ்) அவர்களிடம் சொல்ல சாத்திகள் அழைத்துப் போனார்கள். ஹஜ்ரத்ஜீ (ரஹ்) அவர்களைப் பார்த்தவுடன் அவர் கதறி அழுதார். வுpவரம் கேட்டபோது, 'எனது கனவிலே கண்மணி நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம்) அவர்களின் இடது பக்கத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் இவர்கள்தான்என்றார். ஹஜ்ரத்ஜீ (ரஹ்) அவர்களைப் பார்த்து,முஸாபஹா செய்து முடித்த பின் உமர் மௌலானாவிடம் அழைத்துப் போனார்கள். மௌலானாவைப் பார்த்ததும் மீண்டும் கதறி அழுதார். ஆச்சரியப்பட்ட சாத்திகள் அவரிடம் காரணம் கேட்ட போது, 'ஹஜ்ரத்ஜீ (ரஹ்) பக்கத்தில் நின்றவர் இவர்கள் தான்என்று உமர் மௌலானாவை சுட்டிக் காட்டினார்.
டில்லி மர்க்கஸே சந்தோஷத்தில் மிதந்தது. அன்றைய பயானில் உமர் மௌலானா (ரஹ்) கூறினார்கள். 'கண்மணி நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம்) அவர்கள் கப்ரில் இருந்தும் கூட சும்மா இருக்கவில்லை. தனது தோழர்களை அழைத்துக்கொண்டு மக்களுக்கு தஃவத் கொடுக்க வெளிவந்து விட்டார்கள். உம்மத்தின் பிக்ரிலேயே உள்ளார்கள். நீங்களும் கப்ரில் இருந்துகொண்டு மக்களுக்கு தஃவத் கொடுக்க வேண்டுமானால் இப்போதே அல்லாஹ்வின் பாதையில் சென்று தஃவத் கொடுக்கத் தயாராகுங்கள்'என்று தஷ்கில் செய்தார்கள்.
படிப்பிணை: முஸ்லிம்கள் தங்களின் பொறுப்புகளை மறந்தபோது கண்மணி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம்) அவர்கள் கனவிலே தஃவத் கொடுக்கத் துவங்கி விட்டார்கள். ஒவ்வொருவரும் ஐந்து அமல்களை சரியாகச் செய்தால் முழு உம்மத்திலும் தீன் பரிபூரணமாக ஹயாத்தாகும். என்று (பக்கம் : 58)ல் குறிப்பிடுகின்றார்.

இதிலுள்ள அபத்தங்களைப் பாருங்கள்.நபியைக் கனவில் காண முடியாது.காண முடியும்,கண்டேன் என்று சொல்பவன் பொய்யன் ஆவான்.
தப்லீக் ஜமாஅத் தஃவா செய்வதாகச் சொல்கிறது. இவர்களின் தஃவாவில் திருப்திகாணாமல்தான் நபி கப்ரிலிருந்து தஃவா செய்யவந்தார்கள் என்ற அர்த்தம் இவரின் படிப்பினையிலிருந்து வருகிறது. பொய் தனக்குத் தானே முரண்படும். அவ்வாறு இவரும் முரண்படுகின்றார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : உங்களில் ஒருவர் இறந்து விட்டால் அவர் தங்குமிடம் அவருக்குக் காலையிலும் மாலையிலும் எடுத்துக் காட்டப்படும். அவர் சொர்க்கவாசியாக இருந்தால் சொர்க்கத்திலிருப்பதாகவும் நரகவாசியாக இருந்தால் நரகத்திலிலிருப்பதாகவும் (எடுத்துக் காட்டப்படும்). மேலும், 'அல்லாஹ் மறுமை நாளில் உன்னை எழுப்புகின்ற வரை இதுவே (கப்றே) உனது தங்குமிடம்'  என்றும் கூறப்படும்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) நூல் : புகாரி (1379)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மனிதன் இறந்து விட்டால் அவனுடைய மூன்று செயல்களைத் தவிர மற்ற அனைத்தும் நின்று விடுகின்றனளூ 1. நிலையான அறக்கொடை 2.பயன்பெறப்படும் கல்வி. 3. அவனுக்காகப் பிரார்த்திக்கும் (அவனுடைய) நல்ல குழந்தை.
அறிவிப்பவர் : அபூஹரைரா (ரலி) நூல் : முஸ்லிம் (3084)


கனவிலும் ஹஜ்ரத்ஜீ (ரஹ்)
ஹஜ்ரத்ஜீ மௌலானா இன்ஆமுல் ஹஸன் (ரஹ்) அவர்களின் வபாத்திற்குப் பிறகு டில்லி மர்கஸில் ஷூரா ஜமாஅத்தில் மூன்று பொறுப்புதாரிகள் நியமிக்கப்பட்டார்கள். அதில் ஒருவர்தான் இஸ்ஹாருல் ஹஸன் மௌலானா அவர்கள்.
ஒரு சமயம் மர்கஸில் காலையில் மஷ்வரா நடந்தது. அப்போது,இவர்கள் தாம் நேற்று இரவு கண்ட ஒரு கனவைப் பற்றி அங்குள்ளவர்களிடம் கூறினார்கள். நான் சுவனத்தில் இருக்கிறேன். அங்குள்ள நிஃமத்துகளைக் கண்டு பூரித்து இருக்கும்போது எனக்கு, 'ஹுக்காபிடிக்க ஆசையாக இருந்தது. நான் குடிதN;தன். அப்போது எனது பின்புறம் ஒரு சப்தம் வந்தது. யார் இங்கு ஹுக்கா பிடிப்பது?என்பதுதான் அந்த சப்தம். உடனே திரும்பிப் பார்த்தேன். ஹஜ்ரத்ஜீ இல்யாஸ் (ரஹ்) அவர்கள் இருந்தார்கள்.
என்னைப் பார்த்த இல்யாஸ் (ரஹ்) அவர்கள் ஓ... நம்ம ஆளா என்று வியந்து போனார்கள். உடனே கனவு முடிந்தது என்று கூறினார்கள். இதைக்கேட்ட மஷ்வராவில் இருந்த அனைவரும் சிரித்தார்கள். இவர்கம் அளவுக்கு அதிகமாக சிரித்தார்கள். அனைவரும் சிரித்து முடித்த பின்பும்இவர்கள் ஒருசில நொடிகள் தனியாக சிரித்தார்கள். சிரித்து முடித்த பின் மூன்று தடைவ அல்ஹம்துலில்லாஹ் என்று கூறியவர்களாக மஷ்வராவிலேயே சாய்ந்தார்கள். அவர்களின் ரூஹ் பிரிந்து விட்டது (இன்னாலில்லாஹி).
படிப்பிணை: இந்த வேலையை செய்பவர்களுக்கு கவனத்தின் பஷாரத்துகள் காட்டப்படும். உலகில் சந்தோஷமாக உயிர் வாங்கப்படும். அல்லாஹ்வின் பொருத்தம் கிடைக்கும் என்பதை இந்தச் சம்பவம் நமக்கு நன்கு உணர்த்துகிறது. (பக்கம் : 50)

துஆவில் திருந்திய வாலிபன்
ஹஜ்ரத்ஜீ மௌலானா இன்ஆமுல் ஹஸன் (ரஹ்) அவர்களும் உலகப் புகழ் பேச்சாளர் உமர் மௌலானா (ரஹ்) அவர்களும் முதன் முதலில் தென் ஆபிரிக்காவுக்கு மூன்று சில்லா ஜமாஅத் போனார்கள். அங்கு தஃவத் வேலைகளில் தீவிரமாக ஈடுபடும் ஒரு கார்கூனின் மகன் தீனுக்கு எதிராகயாரையும் மதிக்காமல் ரவுடி போல இருந்தான்.
ஜமாஅத்தினர்களை மதிக்க மாட்டான். தஃவத் வேலை அவனுக்குப் பிடிக்காது. அவன் காலேஜில் படிக்கும் மாணவனாக இருந்தான். தன் மகனின் பே தீனைப் பற்றி ஹஜ்ரத்ஜீ (ரஹ்) உமர் மௌலானா (ரஹ்) ஆகிய இருவரிடமும் கூறி துஆ செய்யும்படி கேட்டுக் கொண்டார் அந்த கார்கூன்.
ஒரு சமயம் ஹஜ்ரத்ஜீ (ரஹ்) அவர்களும் உமர் மௌலானாவும் அந்த கார்கூனின் வீட்டிற்கு வந்து ஒரு புரோக்ராம் செய்துவிட்டு ஜமாஅத் தங்கி இருக்கும் மஸ்ஜிதிற்கு செல்லத் தயாராக இருந்தார்கள். கார்கூன் தனது மகனை அழைத்து, 'இந்த இரண்டு பெரியார்களும்மிக மிக பரிசுத்தமானவர்கள். இவர்கள் இந்தியாவின் டில்லியில் நடந்தால் மக்கள் அப்படியே தூக்கிக் கொண்டு செல்வார்கள். அவ்வளவு கண்ணியமானவர்கள். நீ காலேஜுக்குப் போகும் வழியில்தான் அவர்கள் தங்கி இருக்கும் பள்ளிவாசல் இருக்கிறது. எனவேஅவர்களை உனது காரில் ஏற்றிச் சென்று பள்ளிவாசலில் இறக்கி விட்டுப் போய்விடுஎன்று கூறி தனது மகனை ஹிக்மத்தாக ரஹ்பராக்கி விட்டார்.
சரி என்று அம்மாணவர்கள் ஏற்றுக் கொண்டான். காரின் பின்சீட்டில் ஹஜ்ரத்ஜீ (ரஹ்) அவர்களும்முன் சீட்டில் மாணவனுடன் உமர் மௌலானா (ரஹ்) அவர்களும் அமர்ந்து கொண்டார்கள். கார் ஓட்டிக்கொண்டே சிகரட்டை ஊதிக் கொண்டிருந்தான். புகை காரைச் சூழ்நது இரு பெரியார்களின் முகத்தில் மோதிக் கொண்டிருந்தது. சிறிது நேரம் சென்றவுடன் உமர் மௌலானா (ரஹ்) அவர்கள் ஹிக்மத்தாக மெதுவாக மாணவனிடம் பேசத்துவங்கினார்கள்.'அஸ்ஸலாமு அலைக்கும். தம்பி நீங்கள் நன்றாக கார் ஓட்டி வருகின்றீர்களேஎங்கு கற்றுக் கொண்டீர்கள்?' என்றார்கள். இதைக்கேட்டும் கேட்காமல் அவன் காரை ஓட்டிக்கொண்டே இருந்தான். உடனே உமர் மௌலானா அவர்கள் ஹிக்மத்தாக'நன்றாகக் குடிக்கின்றீர்களேஎங்கு கற்றுக் கொண்டீர்கள்?' என்றார்கள். இதைக்கேட்டு மாணவன் தூக்கி வீசிவிட்டு மௌலானாவைப் பார்த்தான். உடனே மௌலானா, 'தம்பிநீங்கள் சின்ன பிள்ளையாக இருந்தும் மற்றவர்களை நன்றாக மதிக்கக் கற்றுக்கொண்டிருக்கிறீர்கள். காரணம் உங்கள் தந்தை கார்கூன் அல்லவா?' என்றார்கள். மாணவனின் மனம் இறங்கியது. இப்பெரியார்கள் இறங்க வேண்டிய இடமும் நெருங்கியது. இடம் வந்தவுடன் இறங்கும்போது, 'தம்பி நாங்கள் இந்த மஸ்ஜிதில்தான் இருப்போம். உங்களுக்கு நேரம் கிடைத்தால் சில மணித்துளிகள் எங்களோடு வாருங்கள்என்று ஹஜ்ரத்ஜீ (ரஹ்) அவர்கள் கூறி விடைபெற்றுச் சென்றார்கள்.
காலேஜ் சென்ற மாணவன் மனம் மாறி இரண்டு பெரியார்களின் நினைவிலேயே இருந்து காலேஜ் முடிந்ததும் நேராக மஸ்ஜிற்கு வந்துவிட்டார். 'நான் ஒரு நாள் உங்களுடன் இருக்கிறேன்என்றார். அன்றிரவு ஹஜ்ரத்ஜீ (ரஹ்)உமர் மௌலனா இருவரும் இம்மாணவனுக்காக தஹஜ்ஜுதில் ஹிதாயத்திற்காக துஆச் செய்தார்கள். அடுத்த நாள் காலையில் மூன்று நாட்கள் பெயர் கொடுத்தார்.
உடனே தன் தந்தையை பேஜர் மூலம் தொடர்பு கொண்டு, 'நான் ஹஜ்ரத்ஜீ (ரஹ்) அவர்களுடன் ஜமாஅத்தில் இருக்கிறேன். காலேஜிற்கு லீவு சொல்லி விடுங்கள்என்று கூறினார். இதைக் கேட்ட அவரின் தந்தைக்கு மாபெரும் ஆச்சரியம். பின்பு ஜமாஅத்துடன் ஒரு வாரம் வக்த் கொடுத்தார். இந்த ஒரு வாரத்தில் தாடி வைத்தார். சுன்னத்தான கோலத்தை மேற்கொண்டார்.
சில வாரங்கள் ஜமாஅத்துடன் இருந்தார். பேணுதலான முறையில் நடந்து கொண்டார். ஹஜ்ரத்ஜீ (ரஹ்) அவர்களின் வக்த் முடிந்தது. இந்தியா திரும்ப ஆயத்தமானாhகள்.
கண்ணீரோடு ஜமாஅத்தை விட்டுப் பிரிந்து சென்றார்.
இவர் படிக்கும் காலேஜில் மிகப் பேணுதலாக தொழுகைதஸ்பீஹ்,குர்ஆன் திலாவத் போன்றவற்றில் ஈடுபட்டார்.
ஒரு சமயம் இவரின் தாடிப் பகுதியில் கேன்சர் வந்துவிட்டது. டாக்டரிடம் காட்டியபோது தாடியை இறக்க வேண்டும். அப்பொழுதுதான் ஆப்ரேஷன் செய்ய முடியும் என்று கூறிவிட்டார். இதைப்பார்த்து கலங்கிப்போன தந்தை தனது மகனைப் பார்த்து தாடியை இறக்கி விடு என்று உத்தரவு போட்டார். காலேஜில் புரபஸர்கள்மாணவர்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டது. பெரும் கொந்தளிப்பாக உருவாகியது.
அநியாயமாக ஒரு மாணவன் பலியாகப் போகிறானே என்று காலேஜில் உள்ள சக மாணவர்கள்ஆசிரியர் அனைவரும் அம்மாணவனை வற்புறுத்தி தாடியை இறக்கும்படி வேண்டிக் கொண்டார்கள்.
அம்மாணவன், 'இது என் உயிருனும் மேலான கண்மணி நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம்) அவர்களின் மேலான சுன்னத். சுன்னத்தை ஹயாத்தாக்கி விட்டுஅதைத் திரும்ப மௌத்தாக்க என் மனம் விரும்பவில்லை. தாடியை இறக்கினால் திரும்பத் திரும்ப எனக்கு பிரச்சினைகள் தொடர்ந்து வரும். சுன்னதா?உயிராஎன்ற என் வாழ்வின் போராட்டத்தில் சுன்னத்து தான் ஜெயிக்க வேண்டும். சுன்னத்திற்கு நான் இறந்தாலும் பரவாயில்லை. உலகில் சுன்னத்துதான் ஹயாத்தாக்க வேண்டும். சுன்னத்தை ஹயாத்தாக்கத்தான் நாம் உலகில் பிறந்தோம். நமக்கு மௌத்து வருவது நிச்சியம். எனக்கு மௌத்து வரவேண்டும். நான் சுன்னத்தை ஹயாத்தாக்கிய நிலையில்என்று கூறினார்.
பின்பு கேன்சர் கடுமையாகி இறந்துவிட்டார். இம்மாணவனின் பேணுதலான வாழ்க்கையின் காரணமாக அப்பகுதியில்காலேஜில் பெரிய பெரிய திருப்பங்கள் மாற்றங்கள் மாணவர்கள் மத்தியில் உருவாகி விட்டது. பல நூற்றுக்கணக்கான மாணவர்களின் ஹிதாயத்துக்கு தனது உயிராப் பரிசாகத் தந்துவிட்டு சுன்னத்தை உலகில் நிலைநாட்டி விட்டு தன்னுயிரை துறந்தார் அச்சுவனத்து சுந்தர இளைஞர்.
படிப்பிணை: வாலிபவர்களிடம் தீன் வந்துவிட்டால் அவர்களை உலகின் எந்த சக்தியாலும் அழித்துவிட முடியாது. கண்மணி நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம்) அவர்களின் ஒரு சுன்னத்துக்காக தனது உயிரை விலை பேசிவிட்டார். அப்பகுதி மக்களின் அகக் கண்களையும் திறந்து விட்டார். (பக்கம் : 55-58)

ஷைகு பாராட்டிய ஹஜ்ரத்ஜீ (ரஹ்)
ஹஜ்ரத்ஜீ மௌhலானா யூசுப் (ரஹ்) அவர்கள் காலத்தில் சஹாரன்பூர் பக்கத்தில் பெரிய ஷைகு ஒருவர் இருந்தார். அவரின் பயானுக்கு ஆயிரக்கணக்கில் மக்கள் கூட்டம் கூட்டமாக வருவது வழக்கம். இந்த ஷைகிற்கு நிறைய மாணவர்கள் இருந்தார்கள். அந்த மாணவாகளில் சிலருக்கு டில்லி நிஜாமுத்தின் மர்கஸ் தொடர்பு இருந்தது. ஹஜ்ரத்ஜீ யூசுப் (ரஹ்) அவர்களின் பயானைக் கேட்கும் வழக்கமுடைய அம்மாணவர்கள் தனது ஷைகிடம் சென்று 'ஷைகு அவர்களே! டில்லி மர்கஸில் ஹஜ்ரதஜீ (ரஹ்) அவர்களின் பயான் மிகவும் அருமையாகவும்வித்தியாசமாகவும் இருக்கிறதுஎன்று சொன்னார்கள். இதைக்கேட்ட ஷைகு மர்கஸ் சென்று நிலைமையை அறிந்துவர ஆசைப்பட்டார்.
ஒரு சமயம் ஷைகு மர்கஸ் போனார். ஹஜ்ரத்ஜீ (ரஹ்) அவர்கள் பயான் செய்து கொண்டிருந்தார்கள். அச்சமயம் திடீர் என்று மழை பெய்தது. தட்டு பந்தலாக இருந்ததால் மழைத் துளிகள் பொத்துக்கொண்டு விழுந்தது. இந்த ஷைகு மீதும் மழைத்துளிகள் விழுந்தது. ஷைகின் நிலையைப் பார்த்த அவரின் மாணவர்கள் ஒதுங்க அழைத்தபோது அதற்கு ஷைகு, 'நான் இதுபோன்ற பயானை என் வாழ்நாளில் கேட்டது இல்லை. இது புது மாதிரியான பயானாக உள்ளது. கடைசி வரை மழையில் நனைந்து கொண்டே கேட்க ஆசைப்படுகின்றேன்என்று கூறி ஒதுங்க மறுத்துவிட்டார். பயான் முடிந்தது.
ஹஜ்ரத்ஜீ யூசுப் (ரஹ்) அவர்களின் கைகளைப் பிடித்து முஸாபஹா முஆனகா செய்துவிட்டு, 'நான் பேசும் பேச்சைவிட் இது ரூஹானியத்தான பேச்சாக இருக்கிறது. உங்கள் பேச்சு நபிமார்கள் பேச்சைப் போல இருக்கிறதுஎன வியந்து கூறி விடை பெற்றுச் சென்றுவிட்டார். தனது இருப்பிடம் திரும்பிய ஷைக்கிடம் மௌலானா யூசுப் (ரஹ்) அவர்களின் பயான் எப்படி இருந்தது?' என்று மாணவர்கள் விசாரித்தார்கள். அதற்கு ஷைகு அவர்கள், 'இந்த மௌலானா யூசுப் (ரஹ்) அவர்களுக்கு என்னால் இன்னும் 10வருடங்கள் இல்மு படித்துக் கொடுக் முடியும். ஆனால் அவர்களின் எகீனைப் படிக்க 100 வருடங்கள் ஆனாலும் என்னால் படிக்க முடியாதுஎன்றார்.
அதற்குப் பிறகு மர்கஸ் போகவே இல்லை. ஹஜ்ரத்ஜீ (ரஹ்) அவர்கள் வபாத்தான போது மர்கஸ் வந்தார். அந்த ஷைகு மர்கஸின் மாஹூல் அவரின் நெஞ்சத்தை உசுப்பியது. பேரிய மனிதர் இந்த இயக்கத்தை நல்ல முறையில் கொண்டு சென்றார். இன்று அவரும் இறந்து விட்டார். இத்துடன் இந்த வேலையும் இஸ்தமித்து விடும் என்று நினைத்தார்.
ஹஜ்ரத்ஜீ யூசுப் (ரஹ்) அவர்களின் ஜனாஸா அடக்கும் முன்பு பயான் நடந்து தஷ்கீல் செய்யப்பட்டது. அதிகமான நபர்கள் அல்லாஹ்வின் பாதையில் செல்ல பெயர் கொடுத்தார்கள். உடன் புறப்பட்டார்கள். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அந்த ஷைகு, 'இந்த தஃவத்துடைய வேலைக்கு அழிவு இல்லை. கியாமத் நாள் வரை தொர்ந்து நடந்துகொண்டே இருக்கும். உலகில் ஆயிரக்கணக்கான வேலைகள் இருந்தாலும் இதுதான் உயிருள்ள வேலைஎன்று வியந்து பாராட்டிக் கூறிவிட்டுச் சென்றார்.
படிப்பிணை: தீனுடைய வேலை செய்பவர்கள் வாயிலிருந்து உயர்ந்த நபிமார்கள்ரசூல்மார்களின் பேச்சுக்களை அல்லாஹ் வெளியாக்குவான். இது தியாகத்தின் பிரதிபலிப்பாகும். எகீனுடைய பேச்சு வர எகீனுடைய பாதையில் வெளியாக வேண்டும்.
ஹஜ்ரத்ஜீ (ரஹ்) அவர்களின் சுன்னத் மோகம்
ஹஜ்ரத்ஜீ இன்ஆமுல் (ரஹ்) அவர்கள் கண்மணி நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம்) அவர்களின் சுன்னத்துகளைப் பின்பற்றுவதில் மிகத் தீவிரமாக இருப்பார்கள் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம்) அவர்களுக்கு லபித் என்ற யூதன் மூலம் சூனியம் செய்யப்பட்டது. இந்த சுன்னத்தையும் ஹயாத்தாக்க வேண்டும் என்று ஆவலாய் இருந்தார்கள். இந்த சுன்னத்தை அடைய வேண்டும் என்று ஹஜ்ரத்ஜீ (ரஹ்) அவர்கள் அனுதினமும் துஆ செய்து கொண்டிருப்பார்கள். கடைசி காலத்தில் அவர்களின் துஆவை அல்லாஹ் கபூல் செய்தான். மௌத்துக்கு சில காலத்திற்கு முன்பு அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது. இதன் பிறகு மனிதர்களைக் கண்டால் பயந்து நடுங்குவார்கள். இப்படி பல சோதனைகள் வந்தது. அத்தனைக்கும் பொறுமையைக் கடைப்பிடித்தார்கள். பின்பு அல்லாஹ் அதை நீக்கி சுகத்தைக் கொடுத்தான். சுன்னத்தை ஹயாத்தாக்கிய பாக்கியத்தையும் வழங்கினான். சுன்னத் ஹயாத்தானதை நினைத்து ஹஜ்ரத்ஜீ (ரஹ்) அவர்கள் மிகவும் சந்தோஷப்பட்டார்கள்.
படிப்பிணை: நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம்) அவர்களின் முபாரக்கான சுன்னத் மீது ஹஜ்ரத்ஜீ (ரஹ்) அவர்களுக்கு இருந்த ஆழ்நத நேசத்தையும்மோகத்தையும் இச்சம்பவம் நமக்கு உணர்த்துகிறது. நம் மனதுக்குப் பிடித்தவை மட்டும் சுன்னாத் அல்ல. கண்மணி நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம்) அவர்கள் பட்ட கஷ்டங்களையும் நாம் பின்பற்ற வேண்டும் என்ற துடிப்பு,கொதிப்பு உள்ளத்தில் வரவேண்டும். அப்போதுதான் சுன்னத்தின் ஹக்கை பூர்த்தி செய்ய முடியும்.(பக்கம் : 64-65)

வலியுல்லாஹ்வின் முன்னறிவிப்பு
டில்லி ஜமாஅத் ஒன்று சிரியா நாட்டிற்குச் சென்றார்கள். அப்போது உலமாக்கள் ஜமாஅத்தினருக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்து நுஸ்ரத்தாக இருந்தார்கள். ஜமாஅத்துடன் மூன்று நாட்கள் தங்கி இருந்தார்கள். ஒருநாள் ஜமாஅத்தினருக்கு விருந்து கொடுத்து ஹஜ்ரத்ஜீக்களைப் பற்றி ஆச்சரியமான விஷயங்களைச் சொன்னார்கள். 'எங்கள் நாடான சிரியாவில் 150 வருடங்களுக்கு முன்பு மாபெரும் கராமத்கஷ்புள்ள வலியுல்லாஹ் ஒருவர் வாழ்ந்தார்கள். அவர்கள் ஒரு சமயம் இந்தியாவைப் பற்றிக் கூறும்போது ஹஜ்ரத்ஜீ இல்யாஸ் (ரஹ்)ஹஜ்ரத்ஜீ யூசுப் (ரஹ்) ஆகிய இரு பெரியார்கள் இந்தியாவில் தோன்றி நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம்) அவர்களின் சுன்னத்துக்களைபர்ளுகளை ஹயாத்தாக்குவார்கள் என்று வைத்துவிட்டுச் சென்று விட்டார்கள்என்று கூறி அந்த ஓலைச்சுவடியை ஜமாஅத்தினருக்கு காட்டினார்கள். ஜமாஅத்தினர் ஆனந்தக்கண்ணீர் விட்டார்கள்.
படிப்பிணை: வலிமார்களின் பயிற்சிதான் இந்தத் தப்லீகுடைய வேலைகியாமத் வரை இந்த வேலை நிலைத்திருக்கும் என்ற பஷாரத்தை சிரியாவின் கஷ்ஃபுள்ள வலியுல்லாஹ் அவர்கள் சொல்லியிருப்பது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.(பக்கம் : 66-67)
என்றென்றும் சுன்னத்
ஹஜ்ரத்ஜீ இன்ஆமுல் ஹஸன் (ரஹ்) அவர்கள் ஒரு ஜமாஅத்தை எடுத்தக்கொண்டு அமெரிக்கா சென்றார்கள்.
அமெரிக்கா கார்கூன் ஒருவர் ஜமாஅத்தினர்களை விருந்திற்கு தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். ஏற்கனவே பல விருந்தினர்கள் அங்கு கூடியிருந்தனர்.
உணவுகளை அந்நாட்டு முறைப்படி பெரிய டைனிங் டேபிள் மீது குவித்து வைக்கப்பட்டிருந்தது. விருந்தாளிகள் பேசிக்கொண்டே டேபிளை சுற்றி நின்றுகொண்டு ஸ்பூனில் உணவை அள்ளி உண்ண வேண்டும்.
ஹஜ்ரத்ஜீ (ரஹ்) அவர்கள் இக்காட்சியைப் பார்த்தவுடன் கடுமையான கோபம் ஏற்பட்டது. அதை அடக்கிக்கொண்டுவிருந்தளிப்பவர்களிடம்,இந்த முறையை எங்கள் தலைவர் கண்மணி நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம்) அவர்கள் கற்றுத் தரவில்லை. எங்கள் நபியின் சுன்னத்தான முறையில்தான் நாங்கள் சாப்பிடுவோம் என்று கூறி தரையில் உட்கார்ந்து விட்டார்கள். உடனே அங்கிருந்த அனைவரும் ஆச்சரியத்தோடு தரையில் உட்கார்ந்து சுன்னத்தான முறையில் சாப்பிடத் துவங்கினார்கள்.
ஹஜ்ரத்ஜீ (ரஹ்) அவர்களின் நுன்னத் பற்றை பார்த்த அனைவரும் பாராட்டினார்கள். விருந்தாளிகள் ஆளுக்கொரு ஸ்பூன் உணவை எடுத்து ஹஜ்ரத்ஜீ (ரஹ்) அவர்களின் வாயில் ஊட்டி விட்டார்கள்.
படிப்பிணை: எந்த நிலையிலும் கண்மணி நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம்) அவர்களின் சுன்னத்துகளைப் பின்பற்ற முடியும் என்பதை ஹஜ்ரத்ஜீ (ரஹ்) அவர்கள் நிரூபித்துள்ளார்கள். தாயிகளுக்கு நிலைமைகள் சுன்னத்துகளைப் பின்பற்றத் தடையாக இருக்கக்கூடாது. (பக்கம் : 67-68)



மினிஸ்டர் பாராட்டிய ஜமாஅத்தினர்
ஹஜ்ரத்ஜீ மௌலானா யூசுப் (ரஹ்) அவர்கள் மேவாத்திகளிடம் உழைப்பு செய்து மேவாதிகளை மட்டும் ஒரு ஜமாத்தாக்கி நான்கு மாதத்திற்காக ஈராக் நாட்டிற்கு அனுப்பி வைத்தார்கள்.
ஜமாஅத் ஈராக் விமான நிலையத்தில் இறங்கியதும் ஈராக் நாட்டு மினிஸ்டர் ஜமாஅத்தை வரவேற்று அழைத்துச் சென்றார். அவர்கள் அனைவர்களையும் ஒரு அறையில் தங்க வைத்து நன்கு உபசரித்தார். அடுத்;த நாள் ஈராக்கிலுள்ள அப்பகுதி உலமாக்களுக்கு விருந்து அழைப்பு கொடுத்தார். அதிகமான உலமாக்கள் கூடினார்கள். எல்லா உலமாக்களும் விருந்துக்கு கூடியவுடன் அறையில் தங்கி இருந்த ஜமாஅத்தினர்களை அங்கு வரவழைத்தார். சுன்னத்தான கோலத்தில் சலாம் சொன்னவர்களாக வந்து நின்றார்கள். ஜமாஅத்தினர்கள் யாரும் மேஜையின் மீது உட்காரவில்லை. தரையிலேயே சுன்னத்தான முறையில் உட்கார்ந்தார்கள். அப்போது மினிஸ்டர் சிறிது நேரம் உரை நிகழ்த்தினார். ஜமாஅத்தை அறிமுகப்படுத்தினார். ஹஜ்ரத்ஜீ யூசுப் (ரஹ்) அவர்களையும் அறிமுகப்படுத்தினார். ஹஜ்ரத்ஜீ யூசுப் (ரஹ்) அவர்களையும் அறிமுகப்படுத்தினார். பின்பு உலமாக்களை நோக்கிநீங்கள் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம்) அவர்களின் வாரிசுகளாஅல்லாது அல்லாஹ்வின் பாதையில் வந்த ஜமாஅத்தினர்களாஎன்ற ஒரு கேள்வி எழுப்பினார். இதைக்கேட்ட உலமாக்கள் 'நாங்கள்தான் நபிமார்களின் வாரிசுகள்'என்றார்கள். உடனே உலமாக்களை பார்த்த மினிஸ்டர், 'இதோ உட்கார்ந்து இருக்கிறார்களேஅவர்களின் கோலத்தை,நடைமுறையைப் பார்த்தால் நபி போல உள்ளதாஅல்லது உங்கள் தோற்றத்தைப் பார்த்தால் நபி போல உள்ளதாஅவர்கள் உடைகள் நபி போல உள்ளதாஉங்கள் உடைகள் நபி போல உள்ளதா?இவர்களின் கண்களைப் பாருங்கள். எவ்வளவு கலங்கிப்போய் கவலை தெரிகிறது. அதுபோல உங்கள் கண்கள் உள்ளதா?' என்று கவலையாக பேசினார். உலமாக்கள் மௌனமானார்கள். மினிஸ்டர் பேச்சைத் தொடர்ந்தார்.
'நபிமார்களின் வாரிசு என்றால் அது பெயரளவில் இருக்கக்கூடாது. நம் செயலில் நபிமார்களின் வாழ்க்கை இருக்க வேண்டும். நபிமார்களின் உம்மத்துடைய கவலை நமக்கு இருக்க வேண்டும். அவர்கள் கொண்டு வந்த தஃவத்துயை வேலை நாம் ஏற்று நடக்க வேண்டும் அப்பொழுதுதான் நாம் நபிமார்களின் வாரிசுகளாவோம்'என்று ஒரு அருமையான உரை நிகழ்த்தி தஷ்கீல் செய்தார். அங்கிருந்த உலமாக்களில் அதிகம் பேர் அல்லாஹ்வின் பாதையில் செல்ல தங்களின் பெயர்களை கொடுத்தார்கள்.
படிப்பிணை: மினிஸ்டர் கேட்ட கேள்வி நியாயமானதே. ஆவரின் உரையில் ஆழ்ந்த கருத்துக்கள் பொதிந்திருக்கின்றன. நபியுடைய சுன்னத்தில் உயர்ந்தது உம்மத்துடைய கவலை. அதை நாம் எடுத்துக்கொள்ள முன்வர வேண்டும். (பக்கம் :68-69)
ஒரு லட்சம் ஒரு வருடம்
ஒரு சமயம் ஒரு அரபு நாட்டு பெரிய ஷேக் வியாபார விஷயமாக டில்லி வந்த போது மர்கஸிற்கு தொழுவதற்காக வந்தார். தஃவத் அமைப்பைப் பார்த்த அவர் மகிழ்ச்சி அடைந்தார். இவர்கள் தீன் வேலை செய்கின்றார்கள். ஆகவே ஏதாவது நன்கொடை கொடுக்கலாம் என்று நினைத்து உடனே ஹஜ்ரத்ஜீ இன்ஆமுல் ஹஸன் (ரஹ்) அவர்களைச் சந்தித்து ஒரு லட்ச ரூபாய் மர்க்கஸிற்கு கொடுக் முன் வந்தார். உடனே ஹஜ்ரத்ஜீ இன்ஆமுல் ஹஸன் (ரஹ்) அவர்கள் அச்செல்வந்தரிடம் 'நீங்கள் ஒரு வருடம் ஜமாஅத்தில் வரவேண்டும். அப்போது தான் இப்பணத்தை வாங்குவோம்என்றார்கள். இதைக்கேட்ட அவர் திடுக்கிட்டவராக'எனக்கு இருக்கும் பிஸினஸ் பிஸியில் ஒருநாள் கூட ஜமாஅத்தில் போக முடியாதுஎன்று மறுத்தார். பின்பு தஷ்கீல் குறைக்கப்பட்டு மூன்று நாளுக்காக பெயர் கேட்டார்கள். உடனே பெயர் கொடுத்தார். அச்செல்வந்தரை ஜமாஅத்தில் அனுப்பப்பட்டது. மூன்று நாளும் ஏசி காரில் படுத்தும் நிம்மதியான தூக்கம் இல்லை. உடனே மர்க்கஸில் படுத்தார். நிம்மதியான தூக்கம் வந்தது. பின்பு 7 நாள் பெயர் கொடுத்து ஜமாஅத்தில் சென்று மொத்தம் 10 நாள் முடிந்தது அவர் தனது நாட்டிற்கு சென்று விட்டார். பல மாதங்களுக்குப் பிறகு கல்கத்தா இஜ்திமாவிற்காக இந்தியா வந்தார். இஜ்திமாவில் 10 நாள் ஜமாஅத்தில் சென்ற தனது அமீரைப் பார்த்தார். அமீரிடம் 'என்னைத் தெரிகிறதா?' என்று கேட்டார். 'தெரியவில்லைஎன்று அமீர் சாஹிப் சொன்னார். உடனே அவர் அமீருக்கு தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். சந்தோஷப்பட்ட அமீர் சாஹிப் 'இஜ்திமாவிற்காகவா வந்தீர்கள்?' என்று வினவிய போது, 'நான் ஒரு வருடத்திற்கு அல்லாஹ்வின் பாதையில் செல்ல இங்கு வந்துள்ளேன்என்றார். அதற்கு அமீர் 'ஹஜ்ரத்ஜீ (ரஹ்) அவர்களின் தஷ்கீல் துஆ கபூலாகி விட்டதுஎன ஆனந்தப்பட்டார். 'முதலில் 10 நாள் ஜமாஅத்தில் வருவதற்குத் தயங்கினீர்களே! ஏன்?' என்று கேட்டபோது, 'அது பாத்திலில் கழிந்தது. 10 நாள் ஜமாஅத்தின் மூலம் ஹக் புரிந்தது. பாத்தில் வெளியானது ஹஜ்ரத்ஜீ (ரஹ்) அவர்களின் கவலையான துஆவின் மூலம் இன்று ஒரு வருடம் வந்துள்ளேன்என்றார்.
படிப்பிணை: மனிதர்கள் எவ்வளவு பெரிய பிஸியில் இருந்தாலும் நாம் அவர்களைத் தஷ்கீல் செய்ய வேண்டும். அவர்களுடைய பெயரைச் சொல்லி இக்லாஸுடன் துஆச் செய்ய வேண்டும். இதனால் அல்லாஹ் அவர்களை இப்புனித வேலைக்கு தயார்படுத்தி விடுவான். (பக்கம் : 98-99)
மலக்குகளைப் பார்ப்பவர் யார்?
ஒரு சமயம் ஷைகுல் ஹதீஸ் ஜெக்கரிய்யா (ரஹ்) அவர்கள் ஒரு மஸ்லிஸில் பேசும்போதுமஜ்லிஸில் பேசும்போதுமஸ்லிஸில் கூடியிருக்கும் நூற்றுக்கணக்கான மக்களைப் பார்த்துஇங்கு உள்ளவர்களில் மலக்குகளை பார்ப்பவர் மட்டும் இருங்கள். மற்றவர்கள் சென்று விடுங்கள் என்றார்கள். உடனே அனைவரும் சென்று விட்டார்கள். ஹஜ்ரத்ஜீ இன்ஆமுல் ஹஸன் (ரஹ்) அவர்கள் மட்டும் இருந்தார்கள். உடனே ஷைகுல் ஹதீஸ் ஜெக்கரிய்யா (ரஹ்) அவர்களை நோக்கி, 'மறைவான விஷயத்தை இன்று தெரியப்படுத்தி விட்டீர்களே!என்று வருத்தப்பட்டார்கள்ஹஜ்ரத்ஜீ இன்ஆமுல் ஹஸன் (ரஹ்) அவர்கள்.
படிப்பிணை: இரண்டு பெரியார்களும் தீனில் மிக உயர்ந்தவர்கள். இந்த வேலை மூலமாக அல்லாஹ் அவர்களுக்கு மாபெரும் அந்தஸ்த்தை கொடுத்தான். அவர்கள் துஆ பரக்கத்தால் இந்த வேலைக்கு அல்லாஹ் புத்துணர்ச்சியை ஊட்டினான். (பக்கம் : 108)
ஹஜ்ரத்ஜீ இல்யாஸ் (ரஹ்) பார்வையின் சக்தி
ஹஜ்ரத்ஜீ இல்யாஸ் (ரஹ்) அவர்கள் காலத்தில் ஒரு பெரியவர் ஒரு பெண்ணுடன் ரோட்டில் ஓடிவந்தார். அங்கு ஒரு ரிக்ஷாக்காரர் வண்டியோடு நின்றிருந்தார். இருவரும் அந்த ரிக்ஷாவில் ஏறிக்கொண்டார்கள். 'எங்கே போக வேண்டும்?' என்று கேட்டார் ரிக்ஷாக்காரர். உடனே அப்பெண்மணியான பைத்தியம் சொன்னது'எங்காகிலும் கொண்டு போஎன்று. நிலைமையைப் புரிந்து கொண்ட ரிக்ஷாக்காரர் மிகக் கவலையடைந்து நிஜாமுத்தினில் ஒரு பெரியார் இல்யாஸ் (ரஹ்) இருக்கிறார்கள். அவர்களிடம் இப்பைத்தியத்தைக் கொண்டு போனால் சரியாகி விடும் என்று நினைத்து நிஸாமுத்தினுக்குச் சென்றார். இருவரையும் வண்டியிலிருந்து இறக்கி இல்யாஸ் (ரஹ்) அவர்களிடம் அழைத்துச் சென்றார்.
இல்யாஸ் (ரஹ்) அவர்களை அப்பெண் பார்த்தவுடன் நாணத்தால் தலையில் முக்காடு போட்டுக் கொண்டாள். பின்பு பைத்தியம் தெளிந்தது. இது ஹஜ்ரத்ஜீ (ரஹ்) அவர்களின் பார்வையின் சக்தி. (பக்கம் : 76-77)

ஆதம் (அலை) அவர்களும்அவர்களின் துணைவியான அன்னை ஹவ்வா (அலை) அவர்களும் அல்லாஹ்வினால் சுவர்க்கத்திலிருந்து வெளியேற்றப்படும்போதுஅவர்களிடம் இறைவன் பின்வருமாறு சொல்லி அனுப்பினான்.
இங்கிருந்து அனைவரும் இறங்கி விடுங்கள்! என்னிடமிருந்து உங்களுக்கு நேர் வழி வரும் போது எனது நேர் வழியைப் பின்பற்றுவோருக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப் படவும் மாட்டார்கள்என்று கூறினோம்.(திருக்குர்ஆன் : 2:38)
இருவரும் ஒட்டுமொத்தமாக இங்கிருந்து இறங்குங்கள்! உங்களில் சிலர் மற்றும் சிலருக்கு பகைவர்களாவீர்கள். என்னிடமிருந்து உங்களுக்கு நேர் வழி வரும். அப்போது எனது நேர் வழியைப் பின்பற்றுபவர் வழி தவற மாட்டார். துர்பாக்கியசாலியாகவும் மாட்டார்.
எனது போதனையைப் புறக்கணிப்பவனுக்கு நெருக்கடியான வாழ்க்கை உண்டு. அவனை கியாமத் நாளில் குருடனாக எழுப்புவோம்.. திருக்குர்ஆன் : 20:122, 123, 124
தமக்கு வழங்கப்பட்ட அறிவைக் கொண்டு மனிதர்கள் நேர்வழியைக் கண்டறிந்து கொள்வார்கள் என்றால் இவ்வாறு இறைவன் சொல்லி அனுப்பத் தேவையில்லை.
உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்! திருக்குர்ஆன் : 7:3
அவர்களுக்கு நமது தெளிவான வசனங்கள் கூறப்பட்டால் 'இது அல்லாத வேறு குர்ஆனைக் கொண்டு வருவீராக! அல்லது இதை மாற்றியமைப்பீராக!என நமது சந்திப்பை நம்பாதோர் கூறுகின்றனர். நானாக இதை மாற்றியமைத்திட எனக்கு அதிகாரம் இல்லை. எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர வேறு எதையும் நான் பின்பற்றுவதில்லை. என் இறைவனுக்கு நான் மாறு செய்து விட்டால் மகத்தான நாளின் வேதனையை அஞ்சுகிறேன்என (முஹம்மதே!) கூறுவீராக! திருக்குர்ஆன் : 10:15
எந்த மனிதரின் கூற்றையும் பின்பற்றலாகாது என்பதை மிகத் தெளிவாக அல்லாஹ் அல்குர்ஆனில் அறிவிக்கின்றான்.எனவே,தஃலீமிலும் சரி ஹஸ்ரஜியின் சம்பங்களிலும் சரி எது வானாலும் அவற்றில் காணப்படும் மார்க்க விரோத அம்சங்களை விட்டுவிட்டு தூய்மையான வஹியை மட்டும் பின்பற்றினால் அல்லாஹ்விடம் விமோசனம் கிடைக்கும்.

நன்றி - அதிர்வுகள் 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger