காபூல்
ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் ஆட்சியை 2001–ம் ஆண்டு அமெரிக்கா முடிவுக்கு கொண்டு வந்தது.
ஹமீது கர்சாய் தலைமையில் புதிய ஆட்சியை அமெரிக்கா ஏற்படுத்தியது.
அதைத்தொடர்ந்து நேட்டோ படைகள் ஆப்கான் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தன. நேட்டோ படைகளிடம் இருந்து பாதுகாப்பு பணியை ஆப்கான் படைகள் நேற்று ஏற்றன.
இதற்கிடையே ஆப்கானிஸ்தானில் நிரந்தர அமைதியை ஏற்படுத்த தலீபான் தீவிரவாதிகளுடன், கத்தார் நாட்டில் உள்ள தோஹா நகரில் அமெரிக்கா நேரடி பேச்சுவார்த்தை நடத்த இருந்தது. இதில் ஆப்கானிஸ்தான் பிரதிநிதியும் கலந்து கொள்வார் என்று அந்த நாட்டின் ஜனாதிபதி ஹமீது கர்சாய் அறிவித்திருந்தார். இதன் காரணமாக ஆப்கானிஸ்தானில் 12 ஆண்டுகால உள்நாட்டுப்போர் முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
இந்த நிலையில், கதார் நாட்டில் தோஹாவில் திறந்துள்ள தலீபான் அலுவலகத்துக்கு ஆப்கானிஸ்தான் இஸ்லாமிக் எமிரேட் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீது கர்சாய்க்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. (1996–ம் ஆண்டு முதல் 2001–ம் ஆண்டு வரை ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் பதவியில் இருந்தபோது அந்த அரசு ஆப்கானிஸ்தான் இஸ்லாமிக் எமிரேட் என்று அழைக்கப்பட்டு வந்தது.)
இந்த எரிச்சலின் காரணமாக அமெரிக்காவுடன் நடத்தவிருந்த பாதுகாப்பு பேச்சுவார்த்தையை ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி கர்சாய் இன்று காலை அதிரடியாக நிறுத்தினார். இது தலீபான்களுடனான அமெரிக்காவின் பேச்சுவார்த்தை முயற்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும்.
Post a Comment