தமிழக மாணவர்களுக்கு 85% இட ஒதுக்கீடு!

கடலூர்: தமிழக கல்லூரி மாணவர்களுக்கு  85 சதவீத இடங்களை வழங்க வேண்டும் என பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ் மீனாவிடம் தமிழக மாணவர் முன்னணி வேண்டுகோள் விடுத்துள்ளது.
 இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் வே.சுப்பிரமணியசிவா, சிதம்பரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அண்ணாமலை செட்டியாரால் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.

அண்மைக் காலமாக பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேடுகள் மற்றும் நிர்வாக சீர்கேடுகள் காரணமாக பல்கலைக்கழக நிர்வாகத்தை தமிழகஅரசு ஏற்றது. இந்த நடவடிக்கையை மாணவர் முன்னணி வரவேற்கிறது.

அண்ணாமலைப் பல்கலையில் ஆண்டு தோறும் வெளி மாநில மாணவர்கள் அதிகமான பேர் சேர்க்கப்படுகின்றனர். இதனால் தமிழக மாணவர்களின் கல்வி வாய்ப்பு புறக்கணிக்கப்படுகிறது. தமிழ் வளர்க்கப்பட்ட இப்பல்கலையில் அண்மைக் காலமாக வெளி மாநில மாணவர்களால் தமிழ் புறக்கணிக்கப்பட்டு இந்தி திணிப்பு மேலோங்கியுள்ளது. மேலும் ஹோலி, ஓணம் போன்ற கொண்டாட்டங்களால் பல்கலைக்கழக வளாகத்தின் அமைதி சூழல் கெட்டு காவல்துறையினர் தடியடி வரை நடத்தியுள்ளனர்.

எனவே பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சேர்க்கையில் 85 விழுக்காடு தமிழக மாணவர்களுக்கு வழங்க வேண்டும். தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு சேர்க்கையில் முன்னுரிமை அளிக்க வேண்டும். பொறியியல், மருத்துவம், வேளாண்மை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணம் மட்டுமே மாணவர்களிடமிருந்து பெற வேண்டும்.

கடலூர், விழுப்புரம் மாவட்ட மாணவர்களுக்கு சேர்க்கையில் வழங்கப்பட்ட முன்னுரிமையை மீண்டும் நடைமுறை படுத்த வேண்டும் என அந்த கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மாணவர் முன்னணி நிர்வாகிகள் வே.சுப்பிரமணியசிவா தலைமையில் பொறுப்பாளர்கள் ஆ.குபேரன், ப.கா.கார்த்தி, கி.சதீஷ்குமார், மு.சம்பந்தம் ஆகியோர் பல்கலைக்கழக நிர்வாகியை  சந்தித்து மனு அளித்தனர்.
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger