காரைக்கால்: இன்று வெளியான பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில், காரைக்கால் மாவட்ட அளவில், முதல் மாணவியாக பாத்திமா நிலோபர் 496 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார்.
எஸ்.எஸ்.எல்.சி என்னும் 10-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் 27-ஆம் தேதி துவங்கியது. இதில், காரைக்கால் மாவட்டம் சார்பில், 52 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து 1459 மாணவர்களும், 1579 மாணவிகளும், தனித்தேர்வாளர்களாக 577 பேரும் என மொத்தம் 3,615 மாணவ, மாணவிகள் 13 மையங்களில் தேர்வு எழுதினர்.
இதில், 2714 பேர் தேர்ச்சி பெற்றனர். அதாவது, 89.28 சதவிகிதமாகும். இது கடந்த ஆண்டை காட்டிலும் 2.91 சதவிகிதம் அதிகமாகும்.
அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 82.28 சதவிகிதமாகும். இது கடந்த ஆண்டை காட்டிலும் 1.31 சதவிகிதம் அதிகமாகும்.
மாவட்ட அளவில், காரைக்கால் தருமபுரம் எஸ்.ஆர்.வி.எஸ் நேஷனல் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜமால் முகமது மகள் பாத்திமா நிலோபர் 496 மதிப்பெண் எடுத்து முதல் இடத்தையும்; நிர்மராணி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி எஸ்.சந்தியா 494 மதிப்பெண் எடுத்து இரண்டாம் இடத்தையும்; எஸ்.ஆர்.வி.எஸ் நேஷனல் மேல்நிலைப்பள்ளி மாணவி விவசாயி கிருஷ்ணமூர்த்தி மகள் அபிராமி; நிர்மராணி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி இ.தாரணி மற்றும் நெடுங்காடு டொன் போஸ்கோ உயர்நிலைப்பள்ளி மாணவி எஸ்.ஸ்ரீதளாதேவி ஆகிய மூன்று மாணவிகள் 493 மதிப்பெண் எடுத்து மூன்றாம் இடத்தையும் கைபற்றியுள்ளனர்.
மாவட்ட அளவில் முதல் மூன்று இடத்தை பிடித்த 5 பேரும் தனியார் பள்ளி மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
பிளஸ் 2-வை போல் முதல் மற்றும் மூன்றாம் இடத்தை, காரைக்கால் எஸ்.ஆர்.வி.எஸ் நேஷனல் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கைபற்றி சாதனை படைத்துள்ள மாணவிகளுக்கு பள்ளி தாளாளர் செல்லையன், முதல்வர் மோகனாவித்யாவதி, விரிவுரையாளர் ஸ்ரீதர் ஆகியோர் பொன்னாடை போர்த்தி, இனிப்பு வழங்கி பாராட்டினர்.
அரசு பள்ளிகளில் மாவட்ட அளவில், நெடுங்காடு ஜவஹர்லால் நேரு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பி.பாலாஜி(484) பி.புகழரசன்(483) ஏ.மணைகண்டன்(482) ஆகியோர் முதல் மூன்று இடங்களை கைபற்றி சாதனை படைத்துள்ளனர்.
மாவட்ட அளவில் முதல் இடத்தை பிடித்த மாணவி பாத்திமா நிலோபர் பாட வாரியான மதிப்பெண்கள் தமிழ்-98, ஆங்கிலம்-99, கணக்கு-100, அறிவியல்-99, சமூக அறிவியல்-100. இவர் பிளஸ் 2-விற்கு பிறகு மருத்துவராகி சேவை செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார்.
இரண்டாம் இடத்தை பிடித்த மாணவி சந்தியா பாட வாரியான மதிப்பெண்கள் தமிழ்-97, ஆங்கிலம்-98, கணக்கு-100, அறிவியல்-100, சமூக அறிவியல்-99. இவர் பிளஸ் 2-விற்கு பிறகு மருத்துவராகி சேவை செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார்.
இந்நேரம்
Post a Comment