சென்னை: கடந்த சில மாதங்களுக்கு முன்னால் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் வங்கிகளிலும் வணிக வளாகங்களிலும் போலி கடன் அட்டைகளை உபயோகப்படுத்தி லட்சக்கணக்கில் மோசடி செய்து வந்த கும்பல் தமிழக கியூ பிரிவு காவலர்கள் வலையில் சிக்கியது.
இந்த மோசடி கும்பலை கையும் களவுமாக பிடித்த கியூ பிரிவு அதிகாரிகள் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் பிடிபட்ட கும்பலில் இருந்த 5 பேரும் இலங்கையை சேர்ந்தவர்களாவர். மதுரை, திருப்பரங்குன்றத்தில் 2 நாட்களுக்கு முன்பு, போலி கடன் அட்டை மோசடி தொடர்பாக பிடிபட்ட 4 பேரிடம் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.
வெளிநாட்டில் கடன் அட்டைகளை பயன்படுத்தி பொருட்கள் வாங்கும் போது, அந்த அவணிக வளாகத்திலேயே அதற்கென உள்ள நவீன கருவி மூலம் கடவுச்சொல் உள்பட கடன் அட்டைகளின் தகவல்களை, வாடிக்கையாளர்களுக்கே தெரியாமல் பதிவு செய்வது தெரிய வந்துள்ளது. தகவல்களை திருடிய கும்பல் போலி கடன் அட்டைகளையும் தயாரித்து அதை இந்தியாவுக்கு அனுப்புகின்றனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த மோசடியில் குறிப்பாக இலங்கையை சேர்ந்தவர்கள் ஈடுபடுவது தெரிந்ததையடுத்து, இலங்கை தமிழர்கள் சிலரை காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். மேலும் ஓட்டல்கள் மற்றும் வணிக வளாகங்களில் வெளிநாட்டு தொழில் அதிபர்கள் பயன்படுத்தும் கடன் அட்டைகளின் தகவல்களை திருடியது உறுதி செய்யப்பட்டது. கடன் அட்டை தகவல்களை எடுத்து கொண்டு வெளிநாடுகளில் இருந்து சிலர் சுற்றுலா விசாவில் அடிக்கடி சென்னை வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து மோசடியில் ஈடுபடும் ஆசாமிகள் பற்றிய ரகசிய தகவல்களை, விமான நிலைய அதிகாரிகளுக்கு கியூ பிரிவு அதிகாரிகள் கொடுத்திருந்த நிலையில், கொல்கத்தாவில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் சென்னை வந்த இம்ரான் (24) என்பவரை விமான நிலைய அதிகாரிகள் பிடித்து கியூ பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் இருந்து தாய் ஏர்லைன்ஸ் விமானத்தில் நள்ளிரவு 11.50 மணிக்கு இலங்கை தமிழர்கள் நான்கு பேர் வருவது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து கியூ பிரிவு டிஎஸ்பிக்கள் சந்திரன், செல்லத்துரை ஆகிய தனிப்படை காவலர்கள் விமான நிலையத்தில் காத்திருந்தனர்.
சற்று நேரத்தில் தாய் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்திறங்கிய பிரகாஷ், முரளீதரன், சுந்தரேசன், சந்திரமோகன் ஆகிய 4 பேரையும் காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நால்வரும் கனடா நாட்டின் குடியுரிமை பெற்றவர்கள். அங்கு உள்ள தனியார் நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர். பல ஆண்டுகளாக போலி லடன் அட்டை தகவல்களை வாங்கி வந்து சென்னையில் உள்ளவர்களிடம் கொடுத்துள்ளனர். அதன் மூலம் சென்னையில் போலி கடன் அட்டைகளை தயாரித்து, மாநிலம் முழுவதும் அவற்றை விற்று பணமாக்கி மோசடி செய்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து 5 பேரிடமும் கியூ பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்று தெரிகிறது
இந்நேரம்
Post a Comment