ஒவ்வொரு ஆண்டும் ரயில்வே துறை ஜுலை மாதம் ஓன்றாம் தேதி புதிய ரயில் கால அட்டவணையை வெளியிட்டு வருகிறது.
இந்த ரயில் கால அட்டவணையில் ரயில்வே நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கபட்ட ரயில்கள் இயங்கும் நேரம் மற்றும் தற்போது இயங்கிகொண்டிருக்கும் ரயில்களின் நேரத்தை மாற்றி புதிய நேரத்தில் இயக்குதல் போன்ற அறிவிப்புகள் இடம்பெறும். இந்த ஆண்டு ஜுலை மாதம் வெளியிடப்படுகின்ற ரயில் கால அட்டவணை பணிகள் நிறைவுபெற்று விட்டன. ரயில் கால அட்டவணை வெளியிட இன்னமும் குறைந்த நாட்களே உள்ள நிலையில் குமரி மாவட்ட பயணிகள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். கடந்த பெப்ரவரி மாதம் தாக்கல் செய்த ரயில் பட்ஜெட்டில் கன்னியாகுமரியிலிருந்து திருச்சி, மைலாடுதுறை, விழுப்புரம் வழியாக புதுச்சேரிக்கு வாராந்திர ரயில் மற்றும் நாகர்கோவிலிருந்து நாமக்கல் வழியாக பெங்களுருக்கு தினசரி ரயில் அறிவிக்கப்பட்டது. இந்த இரண்டு ரயில்களும் குமரி மாவட்ட பயணிகளுக்கு மிகவும் உபயோகமான ரயில்கள் ஆகும்.
கன்னியாகுமரி - புதுச்சேரி வாராந்திர ரயில்:-
புனித இடங்களான கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரியையும் நேரடியாக ரயில் மூலமாக இணைக்கப்பட இருக்கிறது. இவ்வாறு இந்த இரண்டு இடங்களையும் இணைத்து ரயில் விடுவதால் சுற்றுலா பயணிகள் மற்றும் ஆன்மீக பக்தர்களுக்கு அதிகமாக பயன்பட வாய்ப்புள்ளது. ரயில் பட்ஜெட்டில் அறிவித்த ரயில் மைலாடுதுறை வழியாக இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இயக்குவதால் டெல்டா மாவட்ட பகுதிகளுக்கு குமரி மாவட்டத்திலிருந்து முதன் முதலாக நேரடியாக ரயில் வசதி கிடைக்கும். இந்த ரயில் நாகர்கோவில், வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், அருப்புகோட்டை, மானாமதுரை, சிவகங்கை, தேவகோட்டை ரோடு, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், கும்பகோணம், மைலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், கடலூர், திருப்படையூர், விழுப்புரம் போன்ற ரயில்நிலையங்களில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்ட்டுள்ளது. இந்த ரயில் புதுச்சேரியிலிருந்து வியாழக்கிழமை புறப்பட்டு வெள்ளிகிழமை கன்னியாகுமரி வந்தடைந்து வெள்ளிகிழமை கன்னியாகுமரியிலிருந்து புறப்பட்டு சனிகிழமை காலையில் புதுச்சேரி சென்றடையுமாறு கால அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில் - பெங்களுர் தினசரி ரயில்:-
குமரி மாவட்டத்திலிருந்து பெங்களுர் மற்றும் ஓசூர் ஆகிய ஊர்களுக்கு மதுரை வழியாக தினசரி ரயில் வசதி இல்லாமல் குமரி மாவட்ட பயணிகள் மிகவும் அவதிப்பட்டனர். கடந்த 15 வருடங்களாக இந்த வழி தடத்தில் தினசரி ரயில் இயக்க வேண்டும் என்பது குமரி மாவட்ட பயணிகளின் கோரிக்கை ஆகும். இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் தாக்கல் செய்த ரயில் பட்ஜெட்டில் நாகர்கோவில் - பெங்களுர் தினசரி ரயில் அறிவிக்கப்பட்டது. இந்த ரயில் வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுகல், மதுரை, கரூர், நாமக்கல், சேலம், ஓசூர், பெங்களுர் கண்டோன்மன்ட் போன்ற ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்ட்டுள்ளது. தற்போது இயக்கப்பட்டு வரும் வாராந்திர ரயில் 16537/16538 ரயில் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்ட்டுள்ளது.
நாகர்கோவில் - மும்பை ரயில் வழித்தடம் மாற்றம்:-
நாகர்கோவிலிருந்து திருப்பதி வழியாக மும்பைக்கு வாரத்துக்கு இரண்டு நாள் செல்லதக்க வகையில் 16351/16352 என்ற எண் கொண்ட ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் ஜுலை மாதம் ஓன்றாம் தேதி வெளியிடப்படும் புதிய ரயில் கால அட்டவணையில் திருப்பதி செல்லாமல் நேரடியாக ரெனிகுண்டா வழியாக இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டள்ளது. இந்த அறிவிப்பு செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் பயணிகளின் செயல்பாட்டுக்கு வரும்.
கொல்லம் - நாகர்கோவில் மெமு ரயில் கன்னியாகுமரி வரை நீட்டிப்பு:-
கடந்த ரயில் பட்ஜெட்டில் நாகர்கோவில் - கொல்லம் மெமு ரயில் கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் சுசிந்திரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்ட்டுள்ளது. தற்போது இந்த ரயில் சிறப்பு ரயிலாக கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்யப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது.
மதுரை - கொல்லம் பயணிகள் ரயில் புனலூர் வரை நீட்டிப்பு:-
கடந்த ரயில் பட்ஜெட்டில் மதுரை – கொல்லம் பயணிகள் ரயில் புனலூர் வரை நீட்டிப்பு செய்யப்பட்டு அறிவிக்கப்ட்டது. இந்த ரயில் கொல்லம் மற்றும் புனலூர் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும் என்று அறிவிக்கப்ட்டுள்ளது.
இந்தத் தகவலை கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்க தலைவர் ஸ்ரீராம் தெரிவித்தார். இந்த ரயில்களின் புறப்படும் மற்றும் வந்து சேரும் நேரம் பற்றிய ரயில்களின் கால அட்டவணை ஜுலை மாதம் ஓன்றாம் தேதி புதிய ரயில் கால அட்டவணையையில் வெளியிடப்படும்.
Post a Comment