சீனா கடந்த 11-ம் தேதி, 'ஷென்சு- 10' என்ற விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. அதில் இரண்டு விண்வெளி வீரர்களும், ஒருவீராங்கனையும் சென்றுள்ளனர். இவர்கள் அங்கு 15 நாட்கள் தங்கி ஆய்வுப்பணிகள் மேற்கொள்கிறார்கள். அதில் சென்றுள்ள வாங் யாபிங் என்ற சீன விண்வெளி வீராங்கனை ஆரம்ப மற்றம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு அங்கிருந்தபடி இயற்பியல் வகுப்புகள் எடுப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, அவர் நேற்று விண்வெளியில் உள்ள 'டியாங்காங்-1' ஆராய்ச்சி நிலையத்தில் இருந்தபடி மாணவர்களுக்கு பாடம் நடத்தினார். பம்பரம், பந்து, தண்ணீர் போன்றவற்றுடன் மற்றொரு வீரரையும் வைத்து புவியீர்ப்பு விசை இல்லாத நிலை குறித்து விளக்கினார். விண்வெளியில் ஒரு பொருளின் எடையினையும், அதன் தன்மையையும் பல்வேறு பரிசோதனை மற்றும் எடுத்துக்காட்டுகள் மூலம் விளக்கினார்.
சாதாரண எடை அளவுகோல்கள் விண்வெளியில் பயன்படாது என்பதனை விளக்கிய அவர், அதற்கென பிரத்தியேக எடை அளவுகோலை உபயோகித்து காட்டினார். சக வீரரைப் பயன்படுத்தி விண்வெளியில் பொருட்கள் நகரும் விதத்தையும் மாணவர்களுக்கு விளக்கினார்.
பம்பரத்தினை வைத்து சுழல்முறைகளை விளக்கிய அவர், பந்தினை உபயோகித்து பெண்டுலம் செயல்முறைகளை விளக்கினார். கடைசியில் உலோக வளையம் ஒன்றை வைத்து தண்ணீர்த் திரை ஒன்றை ஏற்படுத்தினார். இதன்மூலம் வெளிப்புற விசை குறித்து விளக்கிய வாங் பின்னர் அதில் மேலும் தண்ணீரை ஊற்றி பந்துபோல் ஆக்கி மாணவர்களின் கரகோஷத்தை பெற்றார்.
பெய்ஜிங் நகரில், 330-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இதெற்கென தயார் செய்யப்பட்ட பிரத்யேக வகுப்பறையில் அமர்ந்து இந்த காட்சிகளை கண்டு களித்தனர். அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு வாங் விளக்கமும் அளித்தார்
Post a Comment