வெள்ளப்பெருக்காலும் நிலச்சரிவாலும் மிக அதிகமான பாதிப்புகளைச் சந்தித்துள்ள உத்தராகண்ட் மாநிலத்தில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு உதவும் நோக்கில் மீட்பு நடவடிக்கைகள் நடந்துவருகின்றன.
தொடர் மழையை அடுத்து ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்ததாலும் அதனை அடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டதினாலும் 62 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் சிக்கித் தவிக்கின்றனர்.
இந்த வெள்ளப் பெருக்கை "இமாலயத்தில் ஏற்பட்ட சுனாமி" என மாநில முதலமைச்சர் விஹய் பஹுகுனா வர்ணித்துள்ளார்.
இமய மலைத்தொடரின் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள கேதர்நாத் என்ற புனித நகரில் ஏராளமானவர்கள் சிக்குண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ருத்ரபிரயாக் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த கேதர்நாத்தில் இராணுவத்தினர் ஹெலிகாப்டர் துணைகொண்டு ஆட்களை மீட்டுவருகிறார்கள்.
இவ்வூரின் பிரசித்தி பெற்ற இந்து ஆலயம் வெள்ளத்தால் அடித்துவரப்பட்ட சேற்றில் மூழ்கிப்போயுள்ளது.
யாத்ரீகர்களுக்கான சுமார் தொண்ணூறு விடுதிகளும், வெள்ளத்தின் பாதையில் இருந்த ஏராளமான பிற கட்டிடங்களும் அடித்துச் செல்லப்பட்டு, அந்த இடமே வரைபடத்தில் இருந்து காணாமல்போன இடமாக காட்சியளிக்கிறது.
ஆற்றின் பாதையில் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரத்துக்கு பாதிப்புகள் காணப்படுகின்றன.
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஐயாயிரத்துக்கும் அதிகமான இராணுவத்தினரும் நூற்றுக்கணக்கான துணை இராணுவப் படையினரும் பேரிடர் நிவாரண அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட இடங்களுக்கு புனித யாத்திரை வந்தவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு உணவு மற்றும் அவசர உதவிப் பொருட்களை சென்று சேர்க்கும் வேலையிலும் இவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால் இப்பகுதியில் நீடிக்கும் மோசமான வானிலை மீட்பு நிவாரணப் பணிகளுக்கு இடைஞ்சலாக அமைந்துள்ளது.
சுமார் 15000 பேர் வரை மீட்கப்பட்டு தரைவழியாகவும் வான் வழியாகவும் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டுசேர்க்கப்பட்டுள்ளதாக உத்தரகாண்ட் காவல்துறை அதிகாரி ஆர் எஸ் மீனா தெரிவித்தார்.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 150ஐத் தாண்டிவிட்டுள்ளதாக உத்தராகண்ட் மாநில மூத்த அதிகாரி ஓம் பிரகாஷ் கூறியிருந்தார்.
ஆனால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கலாம் என மாநில முதல்வர் பஹுகுனா எச்சரித்திருந்தார்.
உத்தராகண்ட் மாநிலத்தை பேரிடர் பிரதேசமாக அறிவித்துள்ள இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அம்மாநிலத்துக்கு ஆயிரம் கோடி ரூபாய் நிவாரண உதவியும் அறிவித்துள்ளார்.
Post a Comment