இயேசுவின் வாக்கு மூலம்:
மேலும் எந்த இயேசுவைக் கிறித்தவர்கள் இறை மகன் என்று நம்புகிறார்களோ அந்த இயேசுவும் பல சந்தர்ப்பங்களில் நன்மக்களைக் "கடவுளின் புத்திரர்கள்" என்று சொல்லியிருக்கிறார்."மனுஷனுடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால் உங்கள் பரமபிதா உங்களுக்கு மன்னிப்பார்." - (மத்தேயு 6:14,15)
"சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்! அவர்கள் தேவனுடைய புத்திரர்கள் எனப்படுவார்கள்." - (மத்தேயு 5:9)
"இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்குப் புத்திரராயிருப்பீர்கள்." - (மத்தேயு 5:45)
"பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?" - (மத்தேயு 7:11)
"பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள்! பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார்." - (மத்தேயு 23:9)
"அவருடைய நாமத்தின் மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனை பேர்களோ அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும் படி அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்." - (யோவான் 1:12)
"அப்பொழுது உங்கள் பலன் மிகுதியாயிருக்கும். உன்னதமானவருக்கு நீங்கள் பிள்ளைகளாயிருப்பீர்கள்." - (லூக்கா 6:35)
நல்ல மனிதர்கள் அனைவரும் கடவுளின் பிள்ளைகள் என்றும், கடவுள் அனைவருக்கும் தந்தை என்றும் இயேசுவே சொல்லி விட்டார். இயேசுவைப் போல் நாம் அனைவரும் கடவுளின் பிள்ளைகள் எனும் போது இயேசுவை மட்டும் கடவுளின் குமாரர் என்றும், மற்ற யாரும் கடவுளின் குமாரர் இல்லை என்றும் நம்புவது இயேசுவுக்கு எதிரான கருத்து என்பதை கிறித்தவர்கள் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர்.
பவுல் வாக்குமூலம்:
இயேசுவுக்குப் பின் முக்கடவுள் கொள்கையை உருவாக்கி கிறித்தவ மார்க்கத்தில் நுழைத்தவர் பவுலடிகள் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். இயேசு கிறிஸ்துவின் தூய மார்க்கத்தைச் சுயமாக மாற்றியமைத்தவர் இவரே. ஆனால் இவர் கூட தன்னையுமறியாமல் இயேசு மட்டும் இறைவனுக்கு மகனாக இருக்க முடியாது என்று வாக்குமூலம் தருகிறார்.
"நாம் தேவனுடைய சந்ததியராயிருக்க மனுஷருடைய சித்திர வேலையினாலும் யுத்தியினாலும் உருவாக்கின பொன், வெள்ளி, கல் இவைகளுக்கு தெய்வம் ஒப்பாயிருக்குமென்று நாம் நினைக்கலாகாது." - (அப்போஸ்தலர் 17:29)
"நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர் தாமே நம்முடைய ஆவியுடனே கூடச் சாட்சி கொடுக்கின்றார்." - (ரோமர் 8:16)
"அப்பொழுது நான் உங்களை ஏற்றுக் கொண்டு உங்களுக்குப் பிதாவாயிருப்பேன். நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்கள் என்று சர்வ வல்லமையுள்ள கர்த்தர் சொல்கிறார்." - (இரண்டாம் கொரிந்தியர் 6:18)
* எல்லா மக்களையும் கர்த்தர் தமது குமாரர்கள் என்கிறார்.
* இயேசுவும் அவ்வாறே கூறுகிறார்.
* இன்றைய கிறித்தவத்தை வடிவமைத்த பவுல் என்கிற சவுலும் அவ்வாறே கூறுகிறார்.
இதிலிருந்து "குமாரர்' எனும் பதம் நல்ல மனிதர்கள் எனும் கருத்திலேயே பைபிளில் கையாளப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம். "புதல்வர்கள்' எனும் அர்த்தத்திலே அப்பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று இதன் பிறகும் கிறித்தவர்கள் பிடிவாதம் பிடித்தால் இறைமகன் என்று பைபிளில் குறிப்பிடப்பட்ட அனைவருமே கர்த்தரின் புதல்வர்கள் தாம் என்பதையாவது அவர்கள் ஒப்புக் கொண்டாக வேண்டும்.
இன்ஷா அல்லாஹ் தொடரும் ...
Post a Comment