மதுரை: தம் மனதில் பட்டவற்றைத் துணிவுடன் பேசிப் பரபரப்புக்குள்ளாகும் மதுரை ஆதீன கர்த்தர் அருணகிரிநாதர் , இப்போது நாட்டுக்குப் பயன்படும் நல்ல கருத்து ஒன்றை வலியுறுத்திப் பாராட்டுகள் பெற்றுள்ளார்.
ஜாதி மதக் கலவரங்களைத் தோற்றுவிக்கும் காரணங்களுள் ஒன்று சிலைகளை அவமதித்தல். தமிழ்நாட்டில் பரவலாக இந்தச்செயல் நடப்பதால் அமைதியை விரும்புவோர் சிலைகளை அகற்றும்படி வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் அரசு இன்னமும் செவிசாய்க்கவில்லை. இப்போது மதுரை ஆதீனம் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைக் காப்பதற்காக, பொது இடங்களில் வைத்திருக்கும் அனைத்துச் சிலைகளையும் அகற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
சிலைகளுக்குப் பாதுகாப்புக் கொடுப்பதற்காகக் காவல்துறையினர் செல்வதால் அவர்களின் பணிகள் பாதிக்கப்படுகின்றன. மனிதவளம் மற்றும் பொருளாதார இழப்புகள் ஏற்படுகின்றன.. தலைவர்களுக்குச் சிலை வைப்பதால்தான் மதிப்பு உயரும் என்றால், அவர்களின் சிலைகளைத் தனி இடங்களில் வைக்கலாம்.
சிலைகளை அவமதிப்பதால் சண்டை , சச்சரவு , கலவரம், உயிரிழப்பு போன்றவை ஏற்படுவதைத் தவிர்க்க, பொது இடங்களில் இருக்கும் அனைத்துச் சிலைகளையும் வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். இனிப் புதிதாகச் சிலைகள்ள் நிறுவவும் தடைவிதிக்க வேண்டும். தமிழக மக்களின் நலனுக்காக , இந்நடவடிக்கை எடுக்கப்படுவதால், ஜாதி, மத நல்லிணக்கம், மக்களிடம் ஒற்றுமை, அமைதி ஆகியன உருவாகும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
பொது மக்களுக்கு இடையூறாகச் சாலை ஓரங்களிலும் நடைபாதைகளை மறித்தும் கட்டப்பட்டுள்ள திடீர்க் கோயில்களையும் அகற்றுவதற்கு ஆதீனம் குரல் கொடுப்பார் எனப் பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.
Post a Comment