புனே வரை நீண்ட வாதம்...3

அதற்கு அவர்கள் “தந்தையில்லாமல் பிறந்த காரணத்தால் மட்டும் அவரை கர்த்தரின் புதல்வர் என நாங்கள் கூறவில்லை. மாறாக தந்தையின்றி அதிசயமாக பிறந்ததோடு மட்டும் அல்லாமல் ஏசு பிறவி குருடர்களை பார்க்கவைத்தார், பிறவி செவிடர்களை கேட்கவைத்தார், வெண்குஷ்ட நோய்களை குணப்படுத்தினார்,
 மேலும் இறந்தவர்களையும் அவர் உயிர்ப்பித்தார். இப்பேர்ப்பட்ட அதிசயங்களை நிகழ்த்தியதால்தான் அவரை கர்த்தரின் புதல்வர் என கூறுகிறோம்” என்றார்கள். 
அப்போது நாங்கள் “அவ்வாறெனில் பைபிளில் மோசே போன்றோர் எல்லாம் இவரைப்போலவே அற்புதங்கள் நிகழ்த்தியிருக்கும்போது, ஏசு செய்த அற்புதத்தை மட்டும் பெரிதுபடுத்திப் பேசுவது ஏன்?” என வினவினோம். அதற்கு அவர்கள் “ஏனெனில் ஏசு பைபிளில் கர்த்தரை “பிதா” என அழைக்கிறார். அதனால்தான் நாங்கள் அவரை கர்த்தரின் குமாரன் என அழைக்கிறோம்” என்றனர். 
அந்நிலையில் நாங்கள் ”ஏசு இறைமகனா?” என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருந்த பல்வேறு பைபிள் ஆதாரங்களைக் கொண்டு ஏசு இறைவனின் மகன் இல்லை என நாங்கள் வாதித்தோம். குறிப்பாக மகதலேனா மரியாள் ஏசுவிடம் வந்து தனது புதல்வர்களை பரலோக இராஜியத்தில் ஏசுவினுடைய வலது பாரிசத்திலும் இடது பாரிசத்திலும் வைத்துக்கொள்ளுமாறு கோரிக்கை வைக்க, அதற்கு ஏசுவோ “என் சித்தப்படி அல்ல, என் பிதாவின் சித்தப்படி எவன் நடக்கிறானோ அவனே பரலோக இராஜியத்தில் பிரவேசிப்பான்” எனக்கூறியதை அவர்களுக்கு எடுத்துக்காட்டி, ஏசு சாதாரண மனிதன் தான். அவருக்கு கடவுளின் ஆற்றலிலும் அதிகாரத்திலும் எந்த பங்கும் இல்லை என்பதனை நிருவினோம். 
பிறகு “பூமியில் உள்ள யாரையும் உங்கள் பிதா என அழைக்காதீர்கள். பரலோகத்தில் இருக்கிற கர்த்தரே உங்களுக்கு பிதாவாக இருக்கிறார்” என்ற வசனத்தை எடுத்துக்காட்டி, உலகில் உள்ள எந்த கிறிஸ்தவறும் ரேஷன் அட்டையிலோ அல்லது விண்ணப்பப் படிவங்களிலோ ”தகப்பன் பெயர்” கோரப்பட்டுள்ள இடத்தில் “கர்த்தர்” என எழுதுவது இல்லை. மாறாக தன்னை ஈன்றெடுத்த தந்தையின் பெயரையே எழுதுகின்றனர். இவ்வசனத்தில் ”பிதா” என குறிப்பிடப்பட்டுள்ளது “இறைவன்” என்ற அர்த்தத்தில்தான் வந்துள்ளது என்பதனை இதன் மூலம் எளிதாக அறியலாம் என்பதனை எடுத்துரைத்தோம். 
அதோடில்லாமல், நடைமுறையிலே உள்ள ஒரு எடுத்துக்காட்டையும் அவர்களுக்கு நாங்கள் முன்வைத்தோம். அதாவது இன்றும்கூட கிறிஸ்தவ ஆலயங்களில் ஆராதனை செய்யும் மத போதகரை நாம் “Father” என்று தான் அழைக்கிறோம். இங்கே இந்த சொல், ஈன்றெடுத்த தந்தை என்ற பதத்தில் கூறப்படவில்லை. மாறாக, மரியாதையின் நிமித்தமாகவே பயன்படுத்தப்படுகிறது. இதில் இருந்தே, பைபிளிலும் கிறிஸ்தவ மதத்திலும் “Father, தந்தை, பிதா” போன்ற சொற்கள் பல அர்த்தங்களில் பயன்படுத்தப்படுகின்றன என்பதனை நாம் தெள்ளத்தெளிவாக அறியலாம். ஆகவே, ஏசுநாதர் அவர்கள் கர்த்தரை “பிதா” என்று அழைத்தது ஈன்றெடுத்த தந்தை என்ற அடிப்படையில் அல்ல. மாறாக “ஆண்டவர்” என்ற அர்த்தத்திலேயே பயன்படுத்தியிருக்கிறார். என்று எங்கள் வாதத்தை நிறுவினோம்.  
மேலும் ”கர்த்தரின் குமாரர் என ஏசுவை குறிப்பிடும் நீங்கள், ஆலயங்களில் ஜெபம் செய்யும்போது “ஆண்டவராகிய ஏசுகிறிஸ்து” என்றுதான் பிரார்த்தனை செய்கிறீர்கள். எப்படி ஒரு ஆட்டின் வாரிசு ஆடாக இருப்பதைப்போல, ஒரு மனிதனின் வாரிசு மனிதனாக இருப்பதைப்போல, கடவுளின் வாரிசு நிச்சயம் கடவுளாகத்தான் இருக்கமுடியும். ஆனால் பைபிளை நாம் படித்துப்பார்த்தோமெனில், பல இடங்களில் அவர் சாதாரண மனிதன்தான் என்பதனை அவரின் நடவடிக்கைகள் மூலமாக நாம் அறிந்துகொள்ள முடிகிறது.  
உதாரணமாக, ஏசுவுக்கு பசி ஏற்பட்டு அவர் கனிகளை புசிப்பதற்காக ஒரு மரத்தை நோக்கி செல்கிறார். ஆனால் அந்த மரத்தில் பழங்கள் இல்லை என்பதை பார்த்தவுடன் அந்த மரத்தை சபிக்கிறார். ஏசு கடவுளாக இருப்பின் அவருக்கு மனிதனுக்கு ஏற்படுவதைப்போல் பசி எடுத்திருக்கக்கூடாது. அந்த மரத்தில் கனிகள் உள்ளதா இல்லையா என்பது கூட அவருக்கு தெரியவில்லை. மேலும், ஒரு சாதாரண மனிதனைப்போல் உணர்ச்சிவசப்பட்டு அந்த மரத்தை திட்டுகிறார். இவற்றை எல்லாம் பார்க்கும்போது அவர் ஒரு சாதாரண மனிதன் என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது. 
மேலும் பைபிளில் வருகின்ற சம்பவங்களின்படி ஏசுவுக்கு பசி ஏற்பட்டிருக்கிறது, அவர் உணவு உட்கொண்டிருக்கிறார், அவர் அரசருக்கு பயந்து வரி செலுத்தியிருக்கிறார். அவரை கொல்ல வரும்போது அவர்களுக்கு பயந்து ஓடி ஒளிந்துள்ளார். தனது சீடர் ஒருவராலேயே அவர் காட்டிக்கொடுக்கப்பட்டுள்ளார். தான் காட்டிக்கொடுக்கப்படுவோம் என்ற விஷயம்கூட கடவுள் என சொல்லப்படுகிற ஏசுவுக்கு தெரியவில்லை. மேற்கண்ட செயல்கள் மற்றும் பைபிளில் உள்ள இவற்றைப்போன்ற எண்ணற்ற செயல்களையும் சம்பவங்களையும் வைத்துப்பார்க்கும்போது மனிதர்களிடத்தே உள்ள அனைத்து பலவீனங்களையும் கொண்டவராகத்தான் ஏசு திகழ்ந்தார் என்பதனை தெள்ளத்தெளிவாக அறிந்துகொள்ள முடிகிறது. 
மேலும் எப்பேர்ப்பட்டவராக இருந்தாலும், அவர் மரணிக்கும் தருவாயில்தான் அவரது சுயரூபம் நமக்கு தெரியவரும். அவர் என்னதான் மனிதசக்திக்கு அப்பார்ப்பட்டவர் என தம்மைக்காட்டிக்கொண்டாலும், அல்லது அவரைபற்றி உலகத்தினர் எவ்வளவுதான் கதைகளையும் கப்ஸாக்களையும் அவிழ்த்துவிட்டாலும் அவர் மரணிக்கும் வேளையில் அவரின் உண்மையான தன்மை என்ன என்பது உலகிற்கு தெரியவரும்.  
ஏசுவை கடவுள் என்றும் கடவுளின் குமாரன் என்றும் என்னதான் மக்கள் கதை அளந்து விட்டாலும், அவர் மரணிக்கும் தருவாயில் தான் சாதாரண மனிதன்தான் என்பதனை இந்த உலகிற்கு காட்டிவிட்டுத்தான் சென்றார். தம்மை சிலுவையில் அறையக்கூடிய அந்த நேரத்தில், “ஏலி ஏலி லாமா சபக்தானி – என் தேவனே! என் தேவனே! ஏன் என்னை கைவிட்டீர்?” என கர்த்தரின் உதவியைத்தான் நாடினாரே தவிர தனக்கு கடவுள் சக்தி உள்ளதாக அவர் காட்டிக்கொள்ளவே இல்லை. அப்படி அவர் உண்மையிலேயே கடவுளாக இருந்திருந்தால், தான் காப்பாற்றப்படவேண்டும் என்று அவர் எதிர்பார்க்கக்கூடிய அந்த நேரத்திலாவது தன்னைத்தானே அவரால் காப்பாற்றி இருக்க முடியும். தான் மரணிக்கும் தறுவாயில்கூட, தன்னை சாதாரண மனிதன் என்றுதான் ஏசு இவ்வுலகிற்கு பிரகடனப்படுத்தினார். இந்த ஒரு சம்பவத்தின் மூலமாகவே, ஏசு இறைவனும் இல்லை, இறைவனின் மகனும் இல்லை என்பதனை தெள்ளத்தெளிவாக நாம் அறிந்துகொள்ளலாம்” என்று எங்களின் வாதத்தை முன்வைத்தோம். 
அல்லது, மனிதகுலத்திற்கு வழிகாட்டத்தான் கடவுள் தனது குமாரனை இவ்வுலகிற்கு அனுப்பிவைத்தார் என்று நீங்கள் கூறுவீர்களேயானால், அந்த வாதமும் ஏற்கமுடியாத ஒன்றாகும். ஏனெனில் மனிதனை நேர்வழிப்படுத்த கடவுளே இவ்வுலகிற்கு இறங்கிவர வேண்டிய அவசியம் இல்லை. தன்னைவிட எல்லாவிதத்திலும் பலமடங்கு கீழே இருக்கும் ஒரு படைப்பாக மாறுவதற்கு ஆண்டவர் நிச்சயம் ஆசைப்படமாட்டார். ஏனெனில் அது கடவுள் தன்மைக்கு மிகவும் இழுக்கான ஒரு செயலாகும். மேலும் கடவுள் நல்லவராக இவ்வுலகில் வாழ்ந்து, அவரை முன்னுதாரனமாகக்கொண்டு மனிதனை வாழச்சொல்லுதல் என்பது நடைமுறைக்கு ஒத்துவராத ஒரு செயலாகும். ஏனெனில், ”அவர் கடவுள் என்ற காரணத்தால் நல்லவராக வாழ்ந்தார். ஆனால் ஒரு மனிதனால் கடவுளைப்போல் எப்படி வாழமுடியும்?” எனக்கூறி மனிதர்கள் அந்தப்போதனையை நிராகரித்துவிடுவர். எனவே, கடவுள் மனித உருவம் கொண்டு இவ்வுலகிற்கு வருவதோ அல்லது கடவுளின் பண்புகளைக்கொண்ட அவரது புதல்வர் என்று சொல்லிக்கொண்டு ஒருவரை இவ்வுலகிற்கு அனுப்பிவைப்பதோ மனிதகுலத்திற்கு ஒருபோதும் நன்மை பயக்கக்கூடிய ஒரு செயலாக இருக்கவே முடியாது என எங்களின் விளக்கங்களைக் கூறினோம்.

                                                              பயணம் தொடரும்...
நன்றி - jesusinvites 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger