ஹிஜாப் தீவிரவாதத்தின் சின்னமா?


இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதும் வைக்கப்பட்டு வரும்குற்றச்சாட்டுக்களுக்கான பதில்களை இந்த பகுதியினூடாக நாம் விளக்கமாக விபரித்து வருகின்றோம். அந்த வகையில் இஸ்லாமிய பெண்கள் அணியும் ஆடை தொடர்பாக வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கான பதிலை இப்போது பார்ப்போம்.

இலங்கையில் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இருந்ததை விட தற்போதைய நிலையில் முஸ்லிம் பெண்கள் தங்கள் உடலை மறைத்து ஆடை அணியும் விகிதம் அதிகரித்துள்ளதாகவும் இதற்கான காரணம் வஹாபிய அடிப்படைவாதம் தான் என்றும் தற்காலத்தில் சில இனவாதிகள் பிரச்சாரம் செய்து வருகின்றார்கள்.
கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இஸ்லாத்தை தூய வடிவில் பின்பற்ற வேண்டும் என்ற மன நிலை பெற்றவர்களை விட தற்போதைய நிலையில் அந்த மனநிலை பெற்றவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. மட்டுமன்றி இஸ்லாத்தின் உண்மைத் தன்மையை அறிவதற்கான ஆர்வமும் வசதியும் அதிகரித்துள்ளமையும் இதற்கான அடிப்படைக் காரணங்களாகும்.
சினிமாக்களிலும், ஆபாச சீரியல்களிலும் நிலைத்திருந்த இஸ்லாமிய பெண்கள் தற்காலத்தில் இஸ்லாத்தின் போதனைகளை சரியான முறையில் பின்பற்ற வேண்டும் என்ற சிந்தனையின் பால் ஈர்க்கப்பட்டதின் காரணமாக அவர்களின் நாளாந்த வாழ்க்கை முறையில் மாற்றத்தை கொண்டு வந்ததைப் போலவே ஆடை விஷயத்திலும் இஸ்லாமிய போதனைகளின் அடிப்படையிலான வாழ்கை முறையை பின்பற்ற முனைந்துள்ளார்கள்.
இதன் காரணமாகவே இஸ்லாம் போதிக்கும் ஹிஜாப் முறையை தங்கள் வாழ்வில் நடை முறைப்படுத்தி வருகின்றார்கள். தங்கள் முகங்களையும் முன் கைகளையும் தவிர மற்ற பாகங்களை அன்னிய ஆடவரிடமிருந்து மறைத்துக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் பெண்களுக்கு  கட்டளையிடுகின்றது. இஸ்லாமிய வழக்கில் இதனையே ‘ஹிஜாப்’ என்று சொல்லப்படுகின்றது. இலங்கையில் பர்தா, புர்கா, என்ற பெயர்களில் இதனையே குறிப்பிடுவார்கள்.
இஸ்லாம் பெண்களுக்கு காட்டித்தந்துள்ள ‘ஹிஜாப் என்பது பெண்களுக்குக் கூடுதல் சுமையாகவும், அவர்களது உரிமையைப் பறிப்பதாகவும், அவர்களது தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடுவதாகவும் அமைந்துள்ளதுடன், மற்றைய பெண்களை விட்டும் முஸ்லிம் பெண்களை தனித்துக் காட்டுவதாகவும் அமைந்துள்ளது. அதனால் இந்த ஆடை முறையை இல்லாமலாக்க வேண்டும் என்று இன்றைக்கு சில இனவாதிகளும் போலி பெண் சுதந்திரம் பற்றிப் பேசும் சிலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றார்கள்.
உண்மையில் இஸ்லாம் சொல்லும் ‘ஹிஜாப்’ என்ற ஆடை பெண்களைக் கௌரவிப்பதற்காகவும், அவர்களின் பாதுகாப்புக்காகவும் ஏற்படுத்தப்பட்டதே தவிர அவர்களது உரிமையைப் பறிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது அல்ல.
ஹிஜாப் பெண்களுக்கு மத்தியில் பிரிவினையை உண்டாக்குகின்றதா?
ஹிஜாபுக்கு எதிரான கருத்துக்களை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்பவர்களின் முதல் வாதமாக இஸ்லாமியப் பெண்கள் தங்கள் உடலை மறைத்து ஆடை அணிவதினால் மற்றைய பெண்களுக்கு மத்தியில் அது பிரித்துக் காட்டுவதாக அமைவதாகவும் அதனால் இஸ்லாமியப் பெண்கள் ஹிஜாப் அணிவதை தடை செய்ய வேண்டும் என்றும் தங்கள் வாதத்தை முன் வைக்கின்றார்கள்.
உண்மையில் இவர்களின் இந்த விமர்சனம் கேளிக் கூத்தானது என்பதை அனைவரும் தெளிவாக அறிந்து கொள்வார்கள். இஸ்லாமியப் பெண்கள் அணியும் ஆடை மற்ற பெண்களை விட்டும் அவர்களை பிரித்துக் காட்டுகின்றது. என்பதற்காகத் தான் ஹிஜாபை தடை செய்ய வேண்டும் என்றால் அனைத்துப் பெண்களுக்கும் சீருடை தான் இவர்கள் வழங்க வேண்டும்.
பாடசாலைகளில் படிக்கும் பிள்ளைகளுக்கு எப்படி சீருடை கொடுப்பார்களோ அப்படி இலங்கையில் வாழும் அனைத்துப் பெண்களுக்கும் இவர்கள் சீருடை வழங்க வேண்டும். அப்படி வழங்கினால் தான் இவர்கள் சொல்லும் குற்றச்சாட்டுக்கு பதில் கிடைத்தாக ஆகும்.
காரணம் முஸ்லிம் பெண்கள் உடலை மூடி ஆடை அணிவதைப் போல் எத்தனையோ பெண்கள் உடலை காட்சிப் படுத்தி ஆடை அணிகின்றார்கள். உடலின் பாதியை மறைத்து மீதியை காட்டிக் கொண்டு திரிகின்றார்கள். இன்னும் சில பெண்கள் முதுகை முழுவதும் காட்டி மார்பை மட்டும் மறைத்துக் கொண்டு திரிகின்றார்கள். இலங்கை பஸ் பிரயாணம் செய்தால் இவற்றை தாராளமாக இனம் காண முடியும்.
தொடை தெரிய ஆடை அணியும் பெண்கள் உள்ளார்கள். மார்பை பாதி மூடி பாதியை காட்டிக் கொண்டு அலையும் பெண்கள் தாராளமாக இந்நாட்டில் இருக்கின்றார்கள். இப்படி அவரவருடைய விருப்பப்படி சாரி, சுடிதார், டவுசர், அடைக்கால் டவுசர் என்று எத்தனையோ ஆடைகளை பெண்கள் அணிந்து செல்கின்றார்கள். இதுவும் பெண்களுக்கு மத்தியில் பல விதமான பிரிவினைகளை உண்டாக்கத் தான் செய்கின்றது. நிலைமை இப்படியிருக்க இஸ்லாமிய பெண்களின் ஹிஜாப் மாத்திரம் பிரிவினையை உண்டாக்குகின்றது என்று வாதிடுவது அபத்தமானது.
இதில் இன்னொரு விஷயத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இஸ்லாமியப் பெண்கள் அணியும் ஹிஜாப் – ஆடையை சாதாரண பொது மகனாக இருப்பவன் விமர்சிப்பது என்பது ஒருவிதம். ஆனால் இன்றைக்கு இந்த விமர்சனத்தை பெரும்பாலான இடங்களில் முன் வைப்பவர்கள் பௌத்த பிக்குமார்களாகும். இந்த விமர்சனத்தை பௌத்த பிக்குமார் எந்த வகையிலும் ஹிஜாபுக்கு எதிராக முன் வைக்க முடியாது. முன் வைக்கவும் கூடாது. காரணம். பெண்களின் சவகாசமே வேண்டாம் என்று துறவரம் மேற்கொண்டிருப்பவர்கள் பௌத்த மத குருமார்கள்.
பெண்களின் சகவாசமே வேண்டாம் என்று துறவரம் மேற்கொள்பவர்களுக்கு பெண்கள் எப்படி ஆடை அணிந்தால் தான் என்ன?
அப்படியே பெண்களின் ஆடை முறையைப் பற்றிப் பேசுவதாக இருந்தாலும் பௌத்த மத குருமார்கள் இஸ்லாம் சொல்லும் ஹிஜாப் முறையைத் தான் ஆதரிக்க வேண்டும். இன்னும் சொல்வதென்றால் அதைப் பற்றி அவர்களே பிரச்சாரமும் செய்யலாம். காரணம் பெண்கள் தங்கள் ஆடை முறையை இஸ்லாம் சொல்லும் ஹிஜாப் முறைப்படி அமைத்துக் கொள்வதுதான் பெண்களுக்கும், ஒழுக்கத்தை விரும்பும் ஆண்களுக்கும் ஏற்றமானதாகும். இதனை கவணத்தில் கொண்டாலே மத குருமார்கள் ஹிஜாபுக்கு எதிராக பேசுவது தவறானது என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
ஹிஜாபை எதிர்ப்பவர்களின் போலித் தனம்.
ஹிஜாப் தொடர்பாக இவர்கள் வைக்கும் இரண்டாவது குற்றச்சாட்டு ஹிஜாப் என்பது பெண்களின் சுதந்திரத்தில் தலையிடுவதுடன் அது பெண்களுக்கான கூடுதல் சுமையாகும். இவர்கள் உண்மையில் தங்கள் கூற்றில் உண்மையாளர்களாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்? ஆடை விஷயத்தில் ஆண்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அதே சுதந்திரத்தை அவர்கள் பெண்களுக்கும் அளிக்க வேண்டும். ஆனால் சமத்துவம் பேசும் அவர்கள் கூட அவ்வாறு அளிக்கத் தயாராக இல்லை.
உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு ஆடவன் சட்டை பனியன் போன்ற மேலாடை எதுவுமின்றி வெறும் அரை நிக்கர் மட்டும் அணிந்து தனது வேலைகளைப் பார்க்கிறான். பலர் முன்னிலையில் இந்தக் கோலத்தில் இருக்கிறான். அதே உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த பெண் ஒருத்தி மேலாடை ஏதுமின்றி பணிபுரியவோ, பலருக்கும் காட்சி தரவோ அனுமதிக்கப்படுவதில்லை. தம் மனைவியை, தம் தாயை, தம் சகோதரியைப் பிறர் முன்னிலையில் இந்த அளவு ஆடையுடன் காட்சி அளிக்க முற்போக்குவாதிகள் உட்பட எவரும் அனுமதிப்பதில்லை.
அது போல் நடுத்தர வர்க்கத்து, அல்லது மேல் மட்டத்து ஆடவன் ஒருவன் மேலாடை ஏதுமின்றி வெளியில் காட்சி தராவிட்டாலும் வீட்டிற்குள் குடும்பத்தினர் முன்னிலையில் இந்தக் கோலத்தில் இருக்கிறான். எல்லா நேரங்களிலும் இவ்வாறு இல்லா விட்டாலும் கடினமான வேலையின் போதும் கடுமையான கோடையின் போதும் இந்தக் கோலத்துடன் இருப்பதுண்டு. அதே வர்க்கத்துப் பெண்கள் இவ்வாறு இருப்பதற்கு அனுமதிக்கப் படுகிறார்களா என்றால் நிச்சயமாக இல்லை.
அன்னிய ஆடவர்கள் முன்னிலையில் மட்டுமின்றிக் குடும்பத்து ஆடவர்கள் முன்னிலையில் கூட இந்த நிலையில் பெண்கள் காட்சி தருவது கிடையாது. ஏன் குடும்பத்துப் பெண்கள் முன்னிலையில் கூட அவ்வாறு காட்சி தர அனுமதிக்கப்படுவது கிடையாது. முற்போக்குவாதிகள் உட்பட எவருமே இதை அனுமதிக்க மாட்டார்கள்.
‘ஆண்களை விடப் பெண்களிடம் மறைக்கப்பட வேண்டிய பகுதிகள் கூடுதலாக உள்ளன என்பதை அப்பெண்களும் உணர்ந்துள்ளனர்; ஆண்களும் உணர்ந்து உள்ளனர்’ என்பதற்கு இந்தப் போக்கு ஆதாரமாக அமைந்துள்ளது.
ஹிஜாபை விமர்சனம் செய்பவர்களிடம் நாம் கேட்கிறோம்; ஆணுக்குப் பெண் சரி நிகர் சமானம் என்பது இப்போது எங்கே போயிற்று? பெண்களின் சுதந்திரம் இப்போது என்னவாயிற்று? முழு அளவுக்கு இல்லையானாலும் ஓரளவுக்கு இவர்களும் ஹிஜாபை வற்புறுத்தவே செய்கின்றனர் என்பது இதன் மூலம் தெளிவாகின்றது.
பெண்கள் ஆண்களை விடக் கூடுதலான பாகங்களை மறைக்க வேண்டும் என்பதை தங்களது நடவடிக்கையின் மூலம் இவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். மறைக்கும் அளவு எது என்பதில் தான் நமக்கும் அவர்களுக்குமிடையே கருத்து வேறுபாடு. சரி நிகர் சமானம் என்பதிலோ, பெண்களின் சுதந்திரம் என்பதிலோ அல்ல.
ஏனெனில் அவர்களும் கூட ஆண்களுக்கு இருக்கும் அதே அளவு சுதந்திரத்தை இந்த விஷயத்தில் பெண்களுக்கு வழங்கி விடவில்லை.
பெண்களுக்கு பாதுகாப்பு.
இனி ஹிஜாப் எவ்வாறு பெண்களுக்குப் பாதுகாப்பாகவும், அவர்களைக் கவுரவிப்பதாகவும் அமைந்துள்ளது என்பதைக் காண்போம்.
ஆண்கள் பெண்களை ரசிக்கக் கூடியவர்களாகவும், பெண்கள் ஆண்களை ரசிக்கக் கூடியவர்களாகவும் படைக்கப் பட்டுள்ளதை நாம் அறிவோம். ஆயினும் இரு பாலரின் ரசனைகளும் வித்தியாசமானவை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
பெண்களின் நிறம், அழகு, இளமை, அல்லது உறுப்புகளின் திரட்சி ஆகியவையே ஆண்களால் ரசிக்கப்படுகின்றன. இதன் காரணமாகத் தான் குறைந்த ஆடையுடன் அல்லது கவர்ச்சியை வெளிப்படுத்திக் காட்டும் இறுக்கமான ஆடையுடன் பெண்கள் காட்சி தரும் போது அதை ஆண்கள் ரசிக்கின்றனர். திரும்பத் திரும்பப் பார்க்க விரும்புகின்றனர். விதி விலக்காக மிகச் சிலர் இருந்தாலும் பொதுவாக ஆண்களின் இயல்பு இது தான்.
பெண்களின் ரசனை இத்தகையது அன்று. ஆண்களின் உடலுறுப்புக்களின் கவர்ச்சியில் அவர்களின் ரசனை செல்வது கிடையாது. இதன் காரணமாகத் தான் ஆண்கள் எவ்வளவு குறைந்த அளவு ஆடையுடன் காணப்பட்டாலும் பெண்கள் பார்த்து ரசிப்பதில்லை. திரும்பப் பார்க்க வேண்டும் என்று அவர்கள் விரும்புவதில்லை.
ஆபாச சினிமாக்கள், புத்தகங்கள் ஆகியவை பெண்களின் நிர்வாணக் கோலத்தை வியாபாரமாக்குவதிலிருந்தும் ஆண்களின் நிர்வாணக் கோலத்தை வியாபாரமாக ஆக்க முடிவதில்லை என்பதிலிருந்தும் கூட இதை அறியலாம்.
ஆண்களும், பெண்களும் கலந்து வாழ்கின்ற இவ்வுலகில் பெண்களின் விருப்பத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு அவர்களின் ஆடையைத் தீர்மானிப்பது தவறாகும். இவர்களைப் பார்த்து ரசிக்கின்ற ஆண்களின் மனோ நிலையையும் கருத்தில் கொண்டே அவர்களது ஆடைகள் தீர்மானிக்கப்பட வேண்டும். இரு சாராரும் கற்புடனும், ஒழுக்கத்துடனும் நடந்து கொள்ள இவ்வாறு கவனிப்பது மிக மிக அவசியமாகும்.
அழகான அன்னியப் பெண்ணிடம் எதை எல்லாம் பார்த்து ரசிக்க ஒரு ஆண் விரும்புகிறானோ அவை கண்டிப்பாக மறைக்கப்பட வேண்டும். ஏனெனில் அவளை முழுமையாக ரசிக்கும் உரிமை அவளது கணவனுக்கு மட்டுமே உரியதாகும். மற்றவர்களுக்கு இதில் எந்த உரிமையும் கிடையாது.
பார்ப்பதால் என்ன குறைந்து விடப் போகிறது என்ற கேள்வி தவறாகும். இதனால் ஏற்படக் கூடிய விளைவுகளை அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கவே செய்கிறோம். தம் மனைவியரை விட அதிக அளவு ரசிக்கத்தக்கவளாக ஒருத்தியைக் காண்பவர்களில் பலர் ரசிப்பதோடு நிறுத்திக் கொண்டாலும் சிலர் முறையின்றி அவளை அடையவும், அனுபவிக்கவும் முயல்வர். கற்பழிப்பு, கொலை வரை கூட இவர்கள் சென்று விடுவதைக் காண முடிகின்றது.
இவ்வளவு மோசமாக நடக்காதவர்கள் கூட மனதளவில் அவளது நினைவிலேயே மூழ்கி விடுகின்றனர். தம் மனைவியருடன் ஒப்பிட்டுப் பார்த்து மனைவியின் மேல் உள்ள ஈடுபாட்டைக் குறைத்துக் கொள்கின்றனர்.
ஒழுக்க வாழ்வில், மிகவும் மோசமாக உலகம் பின்னடைந்திருப்பதற்கு முதற் காரணம் பெண்களின் அரைகுறை ஆடைகளும், ஆண்களைச் சுண்டி இழுக்கும் அலங்காரங்களுமே.
பெண்களைப் பார்த்து ஆண்கள் ரசிப்பது போலவே பெண்களும் ஆண்களை ரசிக்கவே செய்கிறார்கள் என்று சிலர் கூறுகின்றனர். இந்த வாதத்தை உண்மையென்று ஒப்புக் கொண்டாலும் கூட ஹிஜாபை மறுப்பதற்கு இவ்வாதம் வலுவானதன்று
ஏனெனில் ஆண்கள் பெண்களை ரசித்து விட்டுப் பெண்களின் விருப்பமில்லாமலேயே பலவந்தமாக அவர்களை அனுபவித்து விட முடியும். பெண்கள் ஆண்களை ரசிப்பதாகவே வைத்துக் கொண்டாலும் ஆண்கள் விரும்பாத வரை பெண்களால் ஆண்களைப் பலவந்தமாக அனுபவித்து விட முடியாது.
இந்நிலையில் ஒரு ஆண் எவ்வளவு குறைவான ஆடையுடன் இருந்தாலும் அவனுக்குப் பாதிப்பில்லை. ஆனால் அரைகுறையான, கிளர்ச்சியூட்டக் கூடிய ஆடையை அணிந்திருக்கும் ஒரு பெண்ணுக்கு அவளது அரைகுறை ஆடையால் தூண்டப்பட்ட ஆண்களால் பாதிப்புண்டு என்பதில் ஐயமில்லை.
thanks to - rasminmisc
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger