இஸ்லாமியத் திருமணம் - PJ - தொடர் 1


மண வாழ்வின் அவசியம் 

மனித வாழ்வில் தவிர்க்க முடியாத நிகழ்ச்சிகளில் திருமணம் முக்கியமான இடத்தை வகிக்கின்றது. திருமணத்தை மறுப்பவர்கள் மிகவும் அரிதாகவே காணப்படுவதிலிருந்து மணவாழ்க்கையின் அவசியத்தை உணரலாம்.

மணவாழ்வு, ஆன்மீகப் பாட்டைக்கு எதிரானது என்று சில மதங்கள் கூறுவதை இஸ்லாம் ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக, திருமணத்தை அதிகமதிகம் வலியுறுத்துகிறது.

உஸ்மான் பின் மழ்வூன் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் துறவறம் மேற்கொள்ள அனுமதி கேட்ட போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரது கோரிக்கையை நிராகரித்து விட்டனர். அவருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதி தந்திருந்தால் நாங்கள் ஆண்மை நீக்கம்செய்திருப்போம் என்று ஸஃது பின் அபீவக்காஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.நூல்கள்: புகாரி 5074, முஸ்லிம் 2488 
நபித்தோழர்களில் சிலர் நான் மணமுடிக்க மாட்டேன் என்றும், வேறு சிலர் நான் உறங்காமல் தொழுது கொண்டிருப்பேன் என்றும், மற்றும் சிலர் நான் விடாமல் நோன்பு நோற்பேன் என்றும் பேசிக் கொண்டனர். இந்தச் செய்தி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தெரிந்த போது, இப்படியெல்லாம்கூறியவர்களின் நிலை என்னவாகும்? என்று கூறிவிட்டு, நான் நோன்பும் வைக்கிறேன்; அதை விட்டு விடவும் செய்கிறேன். நான் தொழவும் செய்கிறேன்; உறங்கவும் செய்கிறேன். பெண்களை மணமுடிக்கவும் செய்கிறேன். யார் எனது வழிமுறையைப் புறக்கணிக்கிறாரோ அவர் என்னைச் சேர்ந்தவரவல்லர் என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: புகாரி 5063 
மேற்கண்ட நபிமொழியிலிருந்து முஸ்லிம்களுக்கு திருமணம் எவ்வளவு அவசியமானது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

திருமணத்தின் நோக்கம்

திருமணத்தின் அவசியம் குறித்து இஸ்லாம் இரண்டு காரணங்களைக் குறிப்பிடுகின்றது.

மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும், பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான். எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான்.(அல்குர்ஆன் 4:1) 

சந்ததிகள் பெற்றெடுப்பது திருமணத்தின் நோக்கங்களில் ஒன்று என இதன் மூலம் அறியலாம்.

உங்களில் யார் பராமரிப்புச் செலவுக்குச் சக்தி பெற்றுள்ளாரோ அவர் திருமணம் செய்து கொள்ள வேண்டும். ஏனெனில் திருமணம் என்பது (பிறன்மனை நோக்குவதை விட்டும்) பார்வையைத் தடுக்கக் கூடியதாகவும் கற்பைக் காக்கக் கூடியதாகவும் அமைந்துள்ளது என்று நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊது (ரலி) நூல்: புகாரி 1905, 5065, 5066
 
தகாத நடத்தையிலிருந்து ஒவ்வொருவரும் தன்னைக் காத்துக் கொள்வது திருமணத்தின் மற்றொரு நோக்கமாகும் என்பதை இந்த ஹதீஸிலிருந்து அறியலாம்.
திருமண ஒழுங்குகள்

திருமணத்தை இப்படித் தான் செய்ய வேண்டும் என்ற ஒழுங்குகளையும் இஸ்லாம் கற்றுத் தருகின்றது. இஸ்லாம் கூறும் அந்தத் திருமண முறை மற்றவர்களின் திருமண முறையிலிருந்து வித்தியாசமானதாகவும், புரட்சிகரமானதாகவும், நடைமுறைப்படுத்த எளிதானதாகவும், சிக்கனமானதாகவும் அமைந்துள்ளது. 

அந்த ஒழுங்குகளைப் பேணி நடத்தும் போது தான் அது இஸ்லாமியத் திருமணமாக அமையும். அந்த ஒழுங்குகளைக் காண்போம்.

மணப் பெண் தேர்வு செய்தல்

மணப் பெண்ணைத் தேர்வு செய்யும் போது அவள் ஒழுக்கமுடையவளாகவும், நல்ல குணமுடையவளாகவும், இருக்கிறாளா என்பதையே கவனிக்க வேண்டும். பொருளாதாரத்தையோ, குலப்பெருமையையோ, உடல் அழகையோ பிரதானமாகக் கருதக் கூடாது என்று இஸ்லாம் கூறுகின்றது.

மணமகனைத் தேர்வு செய்யும் போது பெண்களும் ஆண்களின் நன்னடத்தையையே பிரதானமாகக் கொள்ள வேண்டும்.

பெண்கள் அவர்களின் செல்வத்திற்காகவும், அவர்களின் அழகுக்காகவும், அவர்களின் பாரம்பரியத்திற்காகவும், அவர்களின் நன்னடத்தைக்காகவும் மணந்து கொள்ளப் படுகின்றனர். நீ நன்னடத்தை உடையவளைத் தேர்வு செய்து வெற்றியடைந்து கொள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 5090 
பெண் பார்த்தல்

ஒருவரை ஒருவர் திருமணத்திற்கு முன்பே பார்த்துக் கொள்வதும் மிகவும் அவசியமாகும். ஒவ்வொருவரும் தமக்குரிய வாழ்க்கைத் துணை பற்றி பல எதிர்பார்ப்புகளை மனதில் வைத்திருப்பார்கள். அந்த எதிர்பார்ப்புகளுக்கேற்ற வகையில் தமது வாழ்க்கைத் துணை அமையாததை திருமணத்திற்குப் பிறகு அவர்கள் அறிய நேர்ந்தால் தம்பதியரிடையே நல்லுறவு பாதிக்கப்படலாம். அதனால் முன்பே ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள வேண்டும்.

நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அப்போது ஒரு மனிதர் வந்து அன்ஸாரிகளைச் சேர்ந்த ஒரு பெண்ணைத் தான் மணமுடிக்க விருப்பதைக் கூறினார். அதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவளைப் பார்த்து விட்டாயா? எனக் கேட்டார்கள். அவர் இல்லை என்றார். நீ சென்று அவளைப் பார்த்துக் கொள்! அவர்களின் கண்களில் ஒரு பிரச்சினை உள்ளது என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 2552

அன்ஸாரிப் பெண்களின் கண்கள் மற்றவர்களின் கண்களிலிருந்து வித்தியாசமாக இருப்பதைக் காரணம் காட்டி மனைவியை நிராகரித்து விடக் கூடாது என்பதற்காக முன்னரே மணப் பெண்ணைப் பார்க்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டுகிறார்கள். 

முகீரா பின் ஷுஃபா (ரலி) அவர்கள் ஒரு பெண்ணை மனம் பேசினார். அவரிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவளைப் பார்த்துக் கொள்! ஏனெனில் அவ்வாறு பார்ப்பது உங்கள் இருவருக்குமிடையே அன்பை ஏற்படுத்த ஏற்றதாகும் என்று கூறியதாக முகீரா (ரலி) அவர்களே அறிவிக்கிறார்கள்.நூல்கள்: திர்மிதீ 1007, நஸயீ 3183, இப்னுமாஜா 1855

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இந்த வழிகாட்டுதலை தமிழக முஸ்லிம்கள் முற்றிலுமாகப் புறக்கணிக்கின்றனர். திருமணத்துக்கு முன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வது பாவச் செயல் எனவும் கருதுகின்றனர். இதைத் தவிர்க்க வேண்டும்.

பெண் பார்க்கும் நிகழ்ச்சி என்ற பெயரில் மணமகனின் தாயும், சகோதரிகளும் தான் பெண் பார்க்கின்றனர். இணைந்து வாழ வேண்டிய இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்கும் உரிமையை இதன் மூலம் மறுக்கின்றனர்.

பெண் பார்ப்பதை வலியுறுத்தி இன்னும் ஏராளமான ஹதீஸ்கள் உள்ளன.
பெண்ணின் சம்மதம்

பெண்ணின் சம்மதம் பெறாமல் திருமணம் செய்விக்க இஸ்லாத்தில் அனுமதி இல்லை. அவர்களின் சம்மதம் பெறுவது மிகவும் அவசியமாகும்.

கன்னிப் பெண்ணாயினும், விதவையாயினும் சம்மதம் பெற வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறிய போது கன்னிப் பெண் (சம்மதம் தெரிவிக்க) வெட்கப்படுவாளே என்று கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவளது மௌனமே அவளது சம்மதமாகும் என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 6971, 6964, 5137

என் தந்தை எனது சம்மதம் பெறாமல் மணமுடித்து வைத்தார். அதனை விரும்பாத நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து இதைக் கூறிய போது, அத்திருமணத்தை ரத்து செய்தார்கள். அறிவிப்பவர்: கன்ஸா பின்த் கிதாம் (ரலி) நூல்: புகாரி 5139, 6945, 6969
பெண்ணின் பொறுப்பாளர்

மணப் பெண்ணின் சம்மதம் அவசியம் என்றாலும் ஒரு பெண் தானாக தன் திருமணத்தை நடத்திக் கொள்ள இஸ்லாம் அனுமதிக்கவில்லை. மாறாக அவளது பூரண சம்மதத்துடன் அவளது பொறுப்பாளர் தான் நடத்தி வைக்க வேண்டும். மண மகன் சார்பில் இத்தகைய பொறுப்பாளர் எவரும் தேவையில்லை.

பொறுப்புள்ள நபரின் முன்னிலையில் திருமணம் நடக்கும் போது பெண்களை வஞ்சகமாக ஏமாற்றும் ஆண்களிடமிருந்து பெண்களுக்குப் பாதுகாப்புக் கிடைக்கிறது. பெண்களுக்குச் சேர வேண்டிய மஹர் தொகை போன்றவற்றைப் பெற்றுத் தருவதற்கும் பெண்கள் சார்பில் வலி என்னும் பொறுப்பாளர் அவசியமாகும்.

இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களை மணக்காதீர்கள் என்று 2:221 வசனத்தில் ஆண்களுக்குக் கட்டளையிடும் இறைவன் இணை கற்பிக்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மணமுடித்துக் கொடுக்காதீர்கள் என்று அதே வசனத்தில் கூறுகிறான். 

ஆண்கள் தாமாகவே திருமணம் செய்யலாம் என்பதையும், பெண்களுக்கு அவர்களின் பொறுப்பாளர்கள், பொறுப்பாளர்கள் இல்லாவிட்டால் சமுதாயத் தலைவர்கள் முன்னின்று திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் என்பதையும் இவ்வசனத்திலிருந்து அறிந்து கொள்ளலாம்.

அவர்களின் குடும்பத்தார் அனுமதியுடன் அவர்களை மணந்து கொள்ளுங்கள்(திருக்குர்ஆன் 4:25) 

இந்த வசனமும் ஒரு பெண் தானாக மணமுடித்துக் கொள்வதைத் தடை செய்கிறது.

பொறுப்பாளர் இன்றி திருமணம் கிடையாது. என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி) நூல்கள்: திர்மிதீ 1020, அபூதாவூத் 1785

இன்ஷா அல்லாஹ் தொடரும்...
நன்றி - tntj துபாய் 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger