ரிசானா நபீகின் மரண தண்டனை ; முஸ்லிம்களை ஏமாற்றும் ஊடகங்கள் + அரசியல் வாதிகள் = அரசியல் ராஜ தந்திரம்



இலங்கை முழுவதும் கடந்த சில வருடங்களாகவே அனைத்து ஊடகங்களிலும் ஆங்காங்கே இடம் பிடித்த ‘ரிசானா நபீக்’ என்ற பெயர் இறுதியாக இலங்கை பத்திரிக்கைகளின் தலைப்புச் செய்தியாகவே இடம் பிடித்தது. காரணம் ‘ரிசானா நபீகுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது’. இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தை நடை முறைப்படுத்தி வரும் ஸவூதி அரேபியாவில் தான் இது நடந்தது.
ரிசானா நபீக்கின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட சந்தர்ப்பத்தில் இருந்து இந்நேரம் வரை அவரைப் பற்றிய அனுதாபச் செய்திகளை பத்திரிக்கைகளிலும், இணையதளங்களிலும், சமூக வலை தளங்களிலும் தாராளமாகவே காணக் கிடைக்கின்றது.
வெளிநாட்டு வேலைவாய்புக்காய் சவூதியை நாடிச் சென்ற ரிசானா நபீக் கொலைக் குற்றத்திற்காக தற்போது மரண தண்டனைக்கு உள்ளாகியுள்ளார். இலங்கை மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்த இவர் வெளிநாட்டுக்குச் செல்லும் போது வயது 17 கடந்த சில வருடங்களாக சிறையில் இருந்தவருக்கு கடந்த புதன் கிழமை மரண தண்டனை நிறை வேற்றப்பட்டது. இலங்கை அரசாங்கத்தின் பலவிதமான கோரிக்கை மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டு ஷரீஅத் சட்டத்தின் அடிப்படையில் இந்த தண்டனை வழங்கப்பட்டது.
ரிசானா நபீக் மரணத்தைத் தழுவிய இந்தத் தருணம் வரை அவருக்கான அனுதாபத்தின் பெயரில் பலவிதமான செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ரிசானாவுக்காக அரசியல் பிரமுகர்களின் அனுதாபங்கள்.
இலங்கைப் பாராளுமன்றத்தில் மௌன அஞ்சலி.
சவூதி அரசைக் கண்டித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிக்கை.
சவூதி அரரை கண்டிக்கும் விதமாக சவூதிக்காக இலங்கைத் தூதுவர் மீள அழைப்பு.
இது போன்ற பலவிதமான செயல்பாடுகளும் ரிசானாவுக்கான அனுதாபத்தின் பெயரில் நடை பெற்று வருகின்றது.
இதே நேரம் ரிசானா நபீக் பற்றிய செய்தியைப் பிரசுரிக்கும் அனைத்து ஊடகங்களும் மூன்று விஷயங்களை முக்கியத்துவப் படுத்துகின்றன.
ரிசானாவின் வயது.
ரிசானாவின் குடும்பம்.
வீட்டின் வறுமை.
பெரும்பாலான இலங்கைப் பத்திரிக்கைகளின் தலைப்புச் செய்தியாக ரிசானாவின் தாய் தந்தை அடங்கிய வீட்டின் நிலைமைதான் புகைப்படக் காட்சிகளாக பிரசுரிக்கப்பட்டிருந்தன. இவற்றைப் பார்க்கும் யாராக இருந்தாலும் ‘பாவம் ரிசானா! சவூதி அரசாங்கத்திற்கு பாச குணமே இல்லையா? இஸ்லாம் இப்படியான கொடூரமான மார்க்கமா? என்ற வெறுப்பு எண்ணங்களையே அந்தப் புகைப்படங்களும், பத்திரிக்கைச் செய்திகளும் உண்டாக்கும். உண்டாக்கியது.
மொத்தத்தில் ரிசானாவின் தரப்பு கஷ்டத்தை மாத்திரம் தான் நாம் செய்தியாக உணர்ந்து கொண்டோமே தவிர இஸ்லாமிய குற்றவியல் ஷரீஅத் சட்டத்தின் உண்மைத் தண்மை மற்றும் நியாயமான நேர்மையான பார்வையை நாம் புரிந்து கொள்ள தவரிவிட்டோம்.
ரிசானா நபீக் மரண தண்டனைக்கு உள்ளாகியதில் இருந்து இது வரைக்கும் ரிசானா பற்றிய பரிதாபச் செய்திகளைப் பேசும் அனைவரும் சவுதி அரசு செய்த காரியத்தை வெறுப்புடன் பார்க்கிறார்கள். அதிலும் குறிப்பாக இஸ்லாமியர்களே சவுதியின் செயலை வெறுப்புணர்வுடன் தான் பார்க்கிறார்கள். ஆனால் சவுதி அரேபிய அரசு நடை முறைப்படுத்தியது இஸ்லாமிய ஷரீஅத் சட்டத்தை என்பதை இவர்கள் உணர மறுக்கின்றார்கள்.
அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழி கெட்டு விட்டார். (33:36)
ரிசானாவுக்காக இவ்வளவு தூரம் பேசும் நாம் இது வரை மற்றவர்களாக இதைப் பேசவில்லையே? இலங்கையில் இருந்து வேலை வாய்ப்புக்காய் சவுதிக்கு சென்று திருடியவர்கள், கொலை செய்தவர்கள், விபச்சாரம் செய்தவர்கள், ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டவர்கள் என எத்தனையோ பேர்களுக்கு இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
கைகள் வெட்டப்பட்டன.
தலைகள் துண்டிக்கப்பட்டது.
கல்லால் அடித்துக் கொள்ளப்பட்டார்கள்.
இப்படி பலரும் இந்த தண்டனைக்கு ஆளாக்கப்பட்டிருக்கும் போது அப்போது இவைகள் பற்றி பேசாத அரசியல் தலைவர்களும், ஜனாதிபதியும் ரிசானாவுக்கு மாத்திரம் குரல் எழுப்புவது ஏன்? இதற்கு முன்பு கொல்லப்பட்ட யாருக்கும் மௌன அஞ்சலி செலுத்தாத பாராளுமன்றம் ரிசானாவுக்காக மாத்திரம் மௌன அஞ்சலி செலுத்தியதின் மர்மம் என்ன? கேட்டால் ஒரு வரி பதில் தான் மிஞ்சும். 
‘அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா’
இன்றைக்கு ரிசானாவுக்கு வழங்கிய தண்டனை தவறு என்று பேசும் பல அரசியல் தலைவர்களில் பெரும்பாலானவர்கள் இலங்கை நாட்டில் இடம் பெற்ற பாரதூரமான தவறுகளைப் பற்றி கருத்து வெளியிட்ட நேரத்தில் அரபு நாட்டு சட்டங்கள் இலங்கைக்கு வேண்டும் அப்போதுதான் இந்த குற்றங்களைத் தடுக்க முடியும் என்று பகிரங்கமாகவே பேசிய வரலாறு உண்டு.
அவ்வளவு ஏன் இலங்கையில் மரண தண்டனை சட்டத்தை நடை முறைப்படுத்த வேண்டும் என்பதைப் பற்றி இப்போதும் வாதப் பிரதி வாதங்கள் பாராளுமன்றத்திலேயே முன்வைக்கப்பட்டுத் தான் வருகின்றன. அப்படியெனில் ஏன் ரிசானா விஷயத்தில் மாத்திரம் இந்த இரட்டை நிலைபாடு எடுக்கிறீர்கள்?
ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடகம்.
ரிசானாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து ஐரோப்பிய யூனியன் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையை பெரிய செய்தியாக ஊடகங்களும் பகிர்ந்து கொண்டிருக்கின்றன.
உண்மையில் ரிசானா நபீக் விஷயத்தில் சவுதி அரசு செய்தது தவறு. அவருக்கு மரண தண்டனை விதித்திருக்கக் கூடாது என்று ஐரோப்பிய யூனியன் பேசுவது சரியானதா? அதைப் பேசும் தகுதி ஐரோப்பிய யூனியனுக்கு இருக்கிறதா? என்றால் கிடையாது.
காரணம் ரிசானா நபீக் குற்றம் செய்தார் என்று நீதி மன்றத்தில் முடிவெடுத்து இந்த தண்டனையைப் பெற்றுக் கொண்டார். ஆனால் ஈராக்கிலும், ஆப்கானிலும், பாலஸ்தீனிலும், காஷ்மீரிலும், செச்னியாவிலும் இன்னும் எத்தனையோ நாடுகளில் எந்தக் குற்றமும் செய்யாத அப்பாவி மக்கள் தினம் தினம் அழிக்ப்படுகின்றார்கள் இது பற்றி ஐரோப்பிய யூனியன் கருத்து வெளியிடவில்லை? அவர்களின் உயிர்கள் மதிப்பற்றவையா?
இஸ்லாமிய குற்றவியலை கொடூரமான என்று வெளி உலகுக்கு ஒரு பொய்ப் பிரச்சாரத்தை முன்னெடுக்க வேண்டும். அதற்கான பகடைக் காயாக ஊடகங்களுக்கும் அரசுகளுக்கும் கிடைத்தது ‘ரிசானா நபீக்’ விவகாரம். அதனால் தான் இந்தனை கருத்துக்கள் எழுகின்றனவே தவிர ரிசானா மீது வைத்த பாசமல்ல என்பதை சிந்திப்பவர்கள் தெளிவாக உணரலாம்.
அன்பின் சகோதரர்களே! இஸ்லாமிய குற்றவியலை நடை முறைப்படுத்திய சவுதி அரேபிய அரசை வெறுப்பதை விடுத்து இஸ்லாமிய குற்றவியல் தண்டனை முறை சொல்லும் நியாயமான காரணங்களை சிந்தித்துப் பாருங்கள். உண்மை தெளிவாக விளங்கிவிடும். 
இஸ்லாமிய குற்றவியல் தண்டனைகள் தொடர்பான விரிவான விளக்கங்களைப் பாருங்கள்.
இஸ்லாமிய குற்றவியல் தண்டனைகள் கொடூரமானவையா?
“இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்கள் மிகவும் கொடூரமானவை; மனிதாபிமான மற்றவை”என்று பரவலாக விமர்சிக்கின்றனர். குற்றங்களுக்குக் கடுமையான தண்டனைகளை இஸ்லாம் வழங்குவதே இதற்குக் காரணம்.
ஆனால் இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்கள் தாம் மனித குலத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் சட்டங்கள் என்பதை நடுநிலையோடு சிந்திக்கின்ற யாரும் புரிந்து கொள்வார்கள்.
குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் என்று விதி ஏற்படுத்தப்பட்டிருப்பதன் நோக்கம் என்ன என்பதைப் புரிந்து கொண்டால் தான் இந்த விஷயத்தில் நாம் சரியான முடிவுக்கு வர முடியும்.
கொலையாளிகளைக் கொல்வதால் கொல்லப்பட்டவனின் உயிர் திரும்பக் கிடைத்து விடப்போவதில்லை; கற்பழித்தவனுக்கு மரண தண்டனை வழங்குவதால் போன கற்பு திரும்ப வரப்போவதில்லை; பொருளாதாரம் சம்பந்தப்பட்ட திருட்டு போன்ற சில குற்றங்களில் வேண்டுமானால் பறி போனவை சில சமயங்களில் கிடைக்கலாமே தவிர பெரும்பாலான குற்றங்களில் குற்றவாளி தண்டிக்கப்பட்டு விடுவதால் அவனால் பாதிக்கப்பட்டவனுக்குப் பயனேதும் கிடையாது.
இழந்ததை மீட்பது தண்டனைகளின் நோக்கம் அல்ல என்பதை இதிலிருந்து விளங்கலாம். அப்படியானால் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டிய காரணம் என்ன?
1. குற்றம் செய்தவனுக்கு வழங்கப்படும் தண்டனைமீண்டும் மீண்டும் குற்றம் செய்வதிலிருந்து அவனைத் தடுக்க வேண்டும்.
2. ஒரு குற்றவாளிக்கு வழங்கப்படும் தண்டனையைக் கண்டு மற்றவர்கள் குற்றம் செய்ய அஞ்ச வேண்டும்.
3. குற்றவாளியால் பாதிப்புக்கு உள்ளா னவன் தனக்கு நீதி கிடைத்து விட்டதாக நம்ப வேண்டும். மனநிறைவு அடைய வேண்டும்.
குற்றவாளிகள் தண்டிக்கப்பட இந்த மூன்றைத் தவிர வேறு காரணங்கள் இருக்க முடியாது.
குற்றம் செய்தவர்கள் மீண்டும் குற்றம் செய்யாமலும், குற்றம் செய்ய நினைப்பவர்கள் அதன் பால் நெருங்காமலும் இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் உலகமெங்கும் சிறைச் சாலைகள், காவல் நிலையங்கள்,நீதிமன்றங்கள் எல்லாம் ஏற்படுத்தப்பட்டுள்ளன. குற்றவாளிகளுக்கு எந்த விதமான தண்டனையும் வழங்கக் கூடாது என்று உலகில் எந்த அரசாங்கமும் கூறுவதில்லை.
ஆனால் உலக நாடுகள் பலவற்றில் இயற்றப்பட்டுள்ள குற்றவியல் சட்டங்களால் குற்றங்களைக் குறைக்க இயலவில்லை.
அது மட்டுமின்றி குற்றவாளிகளுக்கு சிறைச் சாலைகளில் செய்து தரப்படுகின்ற வசதிகள் குற்றங்களை அதிகப்படுத்தவே வழி வகுக்கின்றன.
குற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டிய சட்டங்களே குற்றம் செய்யத் தூண்டினால் என்னவாகும்?
திருட்டு, கற்பழிப்பு, கொலை, கொள்ளை, இன்ன பிற குற்றங்களில் ஈடுபடும் சமூக விரோதிகளுக்கு வழங்கப்படும் தண்டனை என்ன? சில மாதங்களோ,சில வருடங்களோ சிறைத் தண்டனை வழங்கப்படுகின்றது. பெரும் பாலான நாடுகளில் தண்டனையின் அளவு இது தான்.
சிறைத் தண்டனை என்பது என்ன? வெளியே வர முடியாது என்ற ஒரு அம்சத்தை நீக்கி விட்டுப் பார்த்தால் எத்தனையோ பரம ஏழைகளின் வாழ்வை விட சிறை வாழ்வு மேலானதாக உள்ளது.
நியாயமாகவும், நேர்மையாகவும் நடக்கும் ஏழைகளுக்கு அன்றாடம் கால் வயிற்றுக் கஞ்சிக்கே வழியில்லை. அநியாயமாகவும், அயோக்கியத் தனமாகவும் நடந்து கொண்ட குற்றவாளிகளுக்கு மூன்று வேளை உணவுக்கு உத்தரவாதம் தரப்படுகின்றது. உயர்தரமான மருத்துவ வசதிகள் அவர்களுக்குச் செய்து தரப்படுகின்றன. அவர்களின் பொழுதைப் போக்குவதற்காக (?) சினிமா போன்ற வசதிகளும் சிறைச் சாலைகளுக் குள்ளேயே செய்து தரப்படுகின்றன.
இந்தக் குற்றவாளிகளால் பாதிக்கப்பட்டவர்கள் குற்றவாளிகளை எதுவும் செய்து விடாத அளவுக்குப் பாதுகாப்பு வசதிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் வேதனையான அம்சம் என்ன வென்றால், எந்த மக்களிடமிருந்து ஒருவன் திருடுகிறானோ, எந்த மக்களைக் கொலை செய்கிறானோ, எந்தப் பெண்களைக் கற்பழிக்கிறானோ, அந்த மக்களின் வரிப் பணத்திலிருந்து தான் இந்த அயோக்கியர்களுக்கு இவ்வளவு வசதிகளும் செய்து தரப்படுகின்றன.
இந்தப் பெயரளவிலான தண்டனை யால் ஒரு பயனும் ஏற்படாது;ஏற்படவில்லை.
53 முறை சிறை சென்றவர் மீண்டும் கைது!
15 முறை சைக்கிள் திருடியவன் மீண்டும் கைது!
என்றெல்லாம் அன்றாடம் செய்தித் தாள்களில் செய்திகள் வருகின்றன. 53தடவை வழங்கப்பட்ட தண்டனைகள் அவனுக்கு எந்த அச்சத்தையும் ஏற்படுத்தவில்லை. அதை ஒரு தண்டனையாகவே அவன் கருதவில்லை.
சிறைச் சாலைகளில் கிடைக்கும் வசதிகள் பற்றி மற்றவர்களும் தெரிந்து கொண்டதால் “நேர்மையாக வாழ்ந்து கஞ்சிக்குக் கஷ்டப்படுவானேன்?ஏதேனும் குற்றம் புரிந்தால் சிறைச்சாலைகளில் மூன்று வேளை உணவு கிடைக்குமே” என்றெண்ணி அவர்களும் குற்றங்களில் ஈடுபடத் தொடங்குகின்றனர்.
மேலும் குற்றவாளிகள் சிறைச் சாலைகளில் கூட்டாகத் திட்டமிடவும் வாய்ப்புக் கிடைப்பதால் மேலும் பெரிய அளவில் குற்றம் செய்வதற்கு புதுப்புது யுக்திகளை வகுக்கின்றனர்.
சிறைச் சாலைகள் குற்றவாளிகளின் பல்கலைக் கழகங்களாகத் திகழ்வதை அனைவரும் அறிவர்.
ஆண்டு தோறும் குற்றவாளிகள் பெருகி வருகின்றார்கள்; குற்றங்கள் பெருகுகின்றன; குற்றவாளிகளை அதிகப்படுத்துவதற்காக மக்களின் வரிப் பணம் பாழாக்கப்படுகின்றது.
மனிதாபிமானச் (?) சட்டங்கள் ஏற்படுத்திய விளைவுகள் இவை.
பாதிக்கப்பட்டவன் இந்தத் தண்டனைகளால் மன நிறைவு அடைவானா?என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்.
திருட்டுக் கொடுத்தவனிடம் போய் திருடியவனை என்ன செய்யலாம் என்று கேட்டால் “ஆறு மாதம் சோறு போடலாம்” எனக் கூற மாட்டான். கொல்லப்பட்டவனின் மகனிடம் போய் கொலையாளியை என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டால் “பதினான்கு வருடம் அரசாங்கச் செலவில் அவனைப் பராமரிக்க வேண்டும்” என்று கூறுவானா? தலையைச் சீவ வேண்டும் என்பானா?
கற்பழிக்கப்பட்டவள், அதனால் தனது எதிர்காலமே இருண்டு விட்ட நிலையில் கற்பழித்தவனுக்கு எத்தகைய தண்டனை கொடுத்தால் மனம் நிறைவடைவாள்? என்றெல்லாம் பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகளைச் சீர்தூக்கிப் பார்த்து தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.
பாதிக்கப்பட்டவனின் நிலையிலிருந்து பார்க்காமல் பாதிக்கப்படாத இடத்தில் அமர்ந்து கொண்டு சட்டங்கள் இயற்றப்படுவதால் தான் பாதிக்கப்பட்டவனின் உணர்வுகள் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை. இஸ்லாமோ இதைக் கவனத்தில் கொள்கிறது.
ஒருவன் பத்துப் பேரை கொலை செய்து தூக்குத் தண்டனை பெறுகிறான். அவனது தண்டனையைக் கருணை மனுவின் அடிப்படையில் ரத்துச் செய்யும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இது உலகின் பல நாடுகளிலும் பரவலாகக் காணப்படுகிறது.
கொல்லப்பட்டவர்களுக்கு குடியரசுத் தலைவர் மாமனோ, மச்சானோ அல்ல என்றாலும் அந்த அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு அளிக்கப்பட்டிருப்பதிலிருந்து பாதிக்கப்பட்டவனின் நிலையைச் சட்டம் கடுகளவும் கவனத்தில் கொள்ளவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.
இஸ்லாமியச் சட்டம் என்ன கூறுகிறது? ஒருவன் மற்றொருவனின் கண்ணைக் குருடாக்கி விட்டால், இஸ்லாத்தில் இதற்கான தண்டனை குற்றவாளியின் கண்ணையும் குருடாக்கி விட வேண்டும். கண்ணுக்குக் கண்,பல்லுக்குப் பல் என்பது இஸ்லாத்தின் குற்றவியல் சட்டம்.
கண்ணை இழந்தவன் குற்ற வாளியை மன்னித்து விட்டால் குற்றவாளி தண்டிக்கப்பட மாட்டான். அல்லது குற்றவாளியிடம் இழப்பீட்டைக் கோரிப் பெற்றுக் கொண்டாலும் குற்றவாளி தண்டிக்கப்பட மாட்டான்.
அது போலவே கொல்லப்பட்டவரின் வாரிசுகளில் யாரேனும் ஒருவர் குற்றவாளியின் உயிரை எடுக்க வேண்டாம் என்று கூறினால் கூட குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்படாது. இது இஸ்லாமியச் சட்டம்.
அதாவது உலக நாடுகள் குடியரசுத் தலைவருக்கு வழங்கிய அதிகாரத்தை பாதிக்கப்பட்டவனுக்கு இஸ்லாம் அளிக்கிறது.
சட்டங்கள் இப்படித் தான் இருக்க வேண்டும் என்பதை நியாயமான சிந்தனையுடைய யாரும் மறுக்க முடியாது. பாதிக்கப்பட்டவன் மன நிறைவு பெறும் வகையில் தண்டனை அளிக்கப்படா விட்டால் பாதிக்கப்பட்டவனே குற்றவாளி யாகும் நிலைமையும் உருவாகும்.
கொலைக் குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டவன் ஜாமீனில் விடப்படும் போதும், சிறைச் சாலையிலிருந்து நீதி மன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படும் போதும் கொல்லப்பட்டவனின் உறவினர்கள் அவனைக் கொன்று விடுவது அன்றாட நிகழ்ச்சியாகி வருகிறது.
இந்த நிலைமைக்கு என்ன காரணம்? “கொலையாளியை இந்தச் சட்டங்கள் தண்டிக்காது. தண்டித்தாலும் அது போதுமானதாக இருக்காது” என்ற எண்ணத்தின் காரணமாகவே கொலை செய்யப்பட்டவனின் உறவினர்களும் கொலையாளிகளாகி விடுகின்றனர். குற்றங்கள் அதிகரிப்பதற்கு இதுவும் முக்கியக் காரணமாக உள்ளது எனலாம்.
இனி இஸ்லாமியச் சட்டம் எவ்வளவு அர்த்தமுள்ளது; அறிவுப்பூர்வமானது என்பதைக் காண்போம்.
திருட்டுக் குற்றத்தில் ஈடுபடும் ஆண்கள், பெண்கள் ஆகியோரின் வலது கை மணிக்கட்டு வரை வெட்டப்பட வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.
இப்படிக் கையை வெட்டினால் அவன் தொடர்ந்து திருட மாட்டான்; திருடவும் முடியாது.
மீண்டும் திருடுவதற்கு மனதாலும் எண்ண மாட்டான் என்பது ஒரு நன்மை.
முதன் முதலாகத் திருட எண்ணுபவ னும் அதற்குக் கிடைக்கும் தண்டனையை அறியும் போது திருடத் துணிவு பெற மாட்டான். இது மற்றொரு நன்மை.
கை வெட்டப்பட்டவனைப் பார்க்கும் போது அவன் திருடன் என்பதை மற்றவர்கள் அறிந்து கொள்ள இயலும். எனவே அவனிடம் தங்கள் பொருட்களைப் பறிகொடுக்காமல் எச்சரிக்கையாக இருந்து கொள்ளலாம்.
“இவர்கள் இங்கே இருக்கிறார்களா?” என்று திருடர்களின் புகைப் படங்களைப் பொது இடங்களில் ஒட்டி வைப்பதால் அந்த முகங்களை யாரும் நினைவில் பதிய வைக்க இயலாது. ஆனால் கையை வெட்டினால் அதுவே திருடன் என்பதற்குச் சிறந்த அடையாள மாகி விடுகிறது. இது மூன்றாவது நன்மை.
தண்டனைகள் வழங்கப்படுவதன் நோக்கம் பரிபூரணமாக இப்போது நிறைவேறுகிறது. அது மட்டுமின்றி குற்றவாளியை வருடக் கணக்கில் சிறையில் போட்டு அவனைப் பராமரித்துப் பாதுகாக்கும் வகையில் ஏற்படும் பொருளாதாரச் செலவுகள் மிச்சமாகின்றன. மக்களின் வரிப் பணம் பாழாகாமல் இந்தச் சட்டம் தடுக்கின்றது. சிறைக் கூடங்களை ஒழித்து விட்டு இஸ்லாம் பரிந்துரைக்கின்ற தண்டனைகளை அமுல்படுத்தினால் பற்றாக்குறை பட்ஜெட் போடும் அவசியம் இராது.
“பாவம்! கையை வெட்டுகின்றீர்களே!” என்று பரிதாபப்படுவது தான் மனிதாபிமானம் என்று சிலர் எண்ணுகின்றனர்.
மரணப் படுக்கையில் கிடக்கும் தன் மனைவியின் உயிர் காக்கும் மருந்தை வாங்கச் செல்லும் ஒருவனிடமிருந்து திருடன் பணத்தைப் பறித்துக் கொள்கிறான். பணத்தை மட்டுமின்றி தன் மனைவியின் உயிரையும் பறிகொடுத்து நிற்கிறானே! அவனுக்காக யார் பரிதாபப்படுவது?
நேர்மையையும், ஒழுக்கத்தையும் விரும்பக் கூடியவன் பாதிக்கப்பட்டு நடுத்தெருவில் நிற்பதைப் பார்த்து பரிதாபப்படாமல், அவனை நடுத் தெருவில் நிறுத்திய அயோக்கிய னுக்காகப் பரிதாபப்படுகிறார்கள்.
இப்படியே கையை வெட்டிக் கொண்டே போனால் கையில்லாதவர்களின் எண்ணிக்கை பெருகி விடுமே என்றும் சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.
நிச்சயமாக கையில்லாதவர்களின் எண்ணிக்கை பெருகாது. ஒரே ஒரு திருடனின் கையை வெட்டி விட்டால் மற்ற எவனுக்குமே திருடும் துணிவு ஏற்படாது; வெட்டப்படும் கைகளின் எண்ணிக்கை நிச்சயம் பெருகாது.
உதாரணத்துக்காகத் தான் திருட்டுக் குற்றத்தின் தண்டனை பற்றி இங்கே குறிப்பிட்டுள்ளோம். இஸ்லாம் கூறும் தண்டனை முறைகள் யாவுமே இவ்வாறு தான் அமைந்துள்ளன.
கொலை செய்தவனை அரசாங்கம் உடனே கொன்று விடுமானால் கொலை செய்ய எவருமே துணிய மாட்டார்கள். பல்லை உடைத்தால் தனது பல்லும் அரசாங்கத்தினால் உடைக்கப்படும் என்பதை அறிந்தால் எவருமே அடுத்தவனின் பல்லை உடைக்க மாட்டார்கள்.
உலகில் எத்தனையோ அரசுகள் வந்து போய் விட்டன. மக்களின் உயிருக்கும்,உடமைக்கும், கற்புக்கும் பாதுகாப்பு அளிக்கும் பொறுப்பில் அத்தனை அரசுகளுமே தோல்வியைத் தான் தழுவி இருக்கின்றன. எப்போது என்ன நேருமோ என்று அஞ்சியே மக்கள் வாழும் நிலை ஏற்பட்டு விட்டது.
இந்த நிலை மாற வேண்டுமானால் குற்றவாளிகள் விஷயத்தில் கருணை என்ற பேச்சுக்கே இடமளிக்கக் கூடாது. இஸ்லாம் சொல்கின்றது என்ற குறுகிய நோக்கில் இஸ்லாமியத் தண்டனைகளைப் புறக்கணிக்காமல் அதனால் ஏற்படும் நல்ல விளைவுகளைக் கருத்தில் கொண்டு அதை அமுல்படுத்த முன் வர வேண்டும்.
குற்றவாளிகளுக்கு ஒத்தடம் கொடுக்கும் தண்டனைகளை மாற்றி அவர்களுக்கெதிராகச் சாட்டையை உயர்த்தி, கடும் தண்டனைகளை நடைமுறைப்படுத்தினால் உலகம் அமைதிப் பூங்காவாகத் திகழும்.
திருடனைப் பிடித்தவுடன் அவன் கையை வெட்டி விட்டால் பிறகு அவன் நிரபராதி என்பது தெரிய வந்தால் போன கை திரும்பி வந்து விடுமா?என்றெல்லாம் சிலர் கேட்கின்றனர்.
இரண்டு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற பின் எத்தனையோ பேர் நிரபராதிகள் என நிரூபிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இழந்த மூன்றாண்டுகளைத் திருப்பிக் கொடுக்க இயலுமா என்று கேட்டால் அதற்கு என்ன பதில்? என்பதைச் சிந்தித்தால் இப்படிக் கேட்க மாட்டார்கள்.
மேலும் “எடுத்தேன்; கவிழ்த்தேன்” என்று தண்டனை வழங்குமாறு இஸ்லாம் கூறவில்லை. குற்றங்கள் நிரூபிக்கப்பட்ட பின்பே தண்டனை வழங்குமாறு கூறுகின்றது.
மரண தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும் விபச்சாரத்தை நான்கு நேரடியான சாட்சிகள் மூலம் நிரூபிக்க வேண்டும். நான்குக்கும் குறைவானவர்கள் இக்குற்றத்தைச் சுமத்தினால் அவ்வாறு குற்றம் சுமத்தியவர்களுக்கு எண்பது கசையடிகள் வழங்குமாறு இஸ்லாம் உத்தரவிடுகிறது. (பார்க்க: திருக்குர்ஆன் 24:4, 24:13)
இஸ்லாமிய ஆட்சி முறையில் தகுந்த சாட்சியங்களின்றி சில குற்றவாளிகள் தப்பித்துக் கொள்ள முடியுமே தவிர நிரபராதிகள் தண்டிக்கப்படவே முடியாது என்பது தான் உண்மை.
(மேலதிக தகவல்களுக்கு திருமறைக் குர்ஆனின் இந்த வசனங்களையும் பார்த்துக கொள்ளலாம் : 2:178-179; 5:33; 5:38; 5:45; 17:33; 24:2; 24:4)
(பி.ஜெயின் திருக்குர்ஆன் மொழியாக்கம்.)
பெண்களிடம் ஓர் வேண்டுகோள்.
அன்பின் இஸ்லாமிய சகோதரிகளே! சகோதரி ரிசானா நபீக் இன்று ஒரு கொலையாளியாக நம் முன் நிற்பதற்கான காரணம் உழைப்பிற்கான தனது வெளிநாட்டுப் பயணம் தான்.
மற்ற நாடுகளில் இல்லாத அளவுக்கு பெண்கள் வெளிநாட்டு வேலை வாய்பைத் தேடிச் செல்வது இலங்கையில் தான் அதிகமாக உள்ளது.
இஸ்லாத்தை சரியான முறையில் நாம் புரிந்து கொண்டால் இந்த பிரச்சினை நமக்கு ஏற்படவே மாட்டாது என்பதுதான் உண்மையாகும். இஸ்லாமிய சட்டத்தில் பெண்கள் உழைக்க வேண்டும், வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஒரு திட்டமே கிடையாது உழைப்பதை ஆண்களுக்குத்தான் இஸ்லாம் கடைமையாக்கியுள்ளதே தவிர பெண்களுக்கு அல்ல.
தந்தையர்களே! கணவர்களே!
உழைப்பது உங்கள் மீது கடமை என்று இஸ்லாம் தெளிவாக தெரிவித்துள்ள போது அதனை மீறி உங்கள் மனைவியரை, பிள்ளைகளை நீங்கள் வேலை வாய்பைத் தேடி வெளிநாட்டுக்கு அனுப்புகிறீர்கள் இது எந்த விதத்தில் நியாயமானது. உங்கள் மனம் உறுத்தவில்லையா? நீங்கள் செய்யும் இந்த கேவலமான செயல்பாட்டினால் இஸ்லாமிய ஷரீஅத் சட்டமே விமர்சிக்கப்படுகிறதே இதை நீங்கள உணர வேண்டாமா?
ரிசானா நபீக் பற்றிய முன்னைய ஆக்கத்தைப் படிக்க இங்கு க்லிக் செய்யவும்
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger